பிரிந்த வடக்கு கிழக்கில் ஒன்றாக வாழ முடியாத தமிழர்களும் முஸ்லிம்களும் இணைந்த வடக்கு கிழக்கில் இணைந்து வாழலாம் என்பது நம்மை நாமே ஏமாற்றிக்கொள்ளும் வார்த்தையாகும் என உலமா கட்சி தெரிவித்துள்ளது. இது பற்றி அதன் தலைவர் கலாநிதி முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்ததாவது,
கிழக்கையும் வடக்கையும் இணைத்து தமிழ் முஸ்லிம்கள் இணைந்து வாழும் காலம் கணிந்துள்ளது என தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் மதிப்புக்குரிய மாவை சேனாதிராஜா உட்பட பல தமிழ் அரசியல்வாதிகள் அண்மைக்காலமாக பேசி வருவது யதார்த்தத்துக்கு அப்பாற்பட்டதாகும். தற்போது பிரிந்திருக்கும் வடக்கு கிழக்கில் கூட இன்னமும் தமிழர்களும் முஸ்லிம்களும் சந்தேகமற ஒற்றுமைiயாக வாழும் சூழலை கொஞ்சமும் உருவாக்காத த. தே. கூட்டமைப்பு ஒற்றுமைக்கான காலம் கணிந்துள்ளதாக சொல்வது முஸ்லிம்களையும் தமிழர்களையும் ஏமாற்றும் முயற்சியாகும்.
உலமா கட்சியை பொறுத்தவரை தமிழ் முஸ்லிம் ஒற்றுமையை மிகக்கடுமையாக வற்புறுத்தும் கட்சியாகும். கல்முனை மாநகர சபையில் ஒரு தமிழர் பிரதி மேயராக வரவேண்டும் என்ற கருத்தை கல்முiனியில் இருந்து கொண்டே துணிச்சலாக சொன்னவர்கள் நாம் மட்டுமே. இதற்காக முஸ்லிம் சமூகம் எம்மை கடுமையாக விமர்சித்த போதும் இன்னமும் அதே கருத்தில் இருக்கிறோம். ஆனால் தமிழ் முஸ்லிம் ஒற்றுமை என்பது முஸ்லிமின் வீட்டை தமிழ வீட்டுடன் இணைப்பதால் ஒரு போதும் ஏற்படாது என்பதே எமது நிலைப்பாடாகும்.
இன்றிருக்கும் சூழ் நிலையில் தமிழ் முஸ்லிம் ஒற்றுமையை ஏற்படுத்த தமிழ் கூட்டமைப்பு எததகைய சாத்வீக முணைப்பை முன்னெடுத்துள்ளது என கேட்கிறோம். ரஊப் ஹக்கீம் தமிழர் வீட்டில் உணவு அருந்துவதன் மூலம் தமிழ் முஸ்லிம் ஒற்றுமையை காட்ட முடியாது. இதை விட அதிகமாக வடக்கு கிழக்கில் தமிழர்களும் முஸ்லிம்களும் அந்நியோன்யமாக உண்டு வாழ்கிறார்கள். ஆனால் உள்ளே பாரிய நெருப்பு புகைந்து கொண்டிருக்கிறது என்பதை யாராலும் மறுக்க முடியாது.
புலிகளால் வெளியேற்றப்பட்ட வட மாகாண முஸ்லிம்களை அனைத்து நஷ்ட ஈடுகளும் வழங்கப்பட்டு மீள் குடியேற்றுவதற்கு தமிழ் கூட்டமைப்பு எந்த முயற்சியைத்தானும் எடுக்கவில்லை என்றாலும் உபத்திரவமாவது செய்யாமல் இருக்கலாம். ஆனால் கூட்டமைப்பின் வட மாகாண முதலமைச்சரும் உறுப்பினர்களும் பாரிய தடைகளை ஏற்படுத்திக்கொண்டு தமிழ் முஸ்லிம் ஒற்றுமைக்கான காலம் கணிந்துள்ளது என சொல்வது கேலிக்கூத்தாகும். அதே போல் மட்டக்களப்பில் தமிழ் மக்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பல்லாயிரக்கணக்கான முஸ்லிம்களின் காணிகள் இன்னமும் விடுவிக்கப்படவில்லை. களுவாஞ்சிக்குடியில் ஒரு முஸ்லிம் தனக்கென வர்த்தக நிலையமொன்றை வாங்கும் சூழ் நிலை இன்னமும் உருவாகவில்லை.
அதே போல் முஸ்லிம்களின் பொத்துவில், திருக்கோவில், தோப்பூர் காணிப்பிரச்சினைகள் எதுவும் இன்னமும் தீரவில்லை. கல்முனை புதிய நகர அபிவிருத்தியில் இன்னமும் தமிழர்களுக்கும் முஸ்லிம்களுக்குமிடையிலும் ஒரு சாண் அளவாவது புரிந்துணர்வு ஏற்படவில்லை. இத்தனைக்கும் தமிழ் கூட்டமைப்பும் முஸ்லிம் காங்கிரசும் பணத்துக்கும் பதவிக்கும் ஆசைப்பட்டு கிழக்கு மாகாண சபையில் ஒன்றிணைந்து உல்லாசம் அனுபவித்துக்கொண்டு கல்முனையில் இந்த இரு இனத்தையும் மோதவிட்டு வேடிக்கை பார்க்கிறார்கள்.
கிழக்கு முஸ்லம்கள் இன்று சிங்கள பேரினவாதம், தமிழ் பேரினவாதம் என்ற இரு பேரினவாதங்களுக்கும் முகம் கொடுக்கிறார்கள். இந்த நிலையில் வடக்கையும் கிழக்கையும் இணைத்தாலும் இதே நிலைதான் தொடருமே தவிர எந்த நன்மையும் முஸ்லிம்களுக்கு கிடைக்கப்போவதில்லை. ஆகவே வடக்கு கிழக்கை இணைப்பது என்ற பேச்சை தமிழ் தரப்பினர் பேசி மீண்டும் மீண்டும் முஸ்லிம் மக்களுக்கு தமிழ் மக்கள் மீது வெறுப்புணர்வை ஏற்படுத்தாமல் தமிழ் முஸ்லிம் மக்களின் இதய ஒற்றுமைக்கு தமிழ் கூட்டமைப்பினர் களத்தில் இறங்க வேண்டும் என உலமா கட்சி சொல்லிக்கொள்கிறது.