அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் விடுகின்ற தவறுகளை ஒவ்வொரு தஃவா அமைப்புகளும் பகிரங்கமாக சுட்டிக்காட்டுகின்ற ஒரு நிலை ஏற்பட வேண்டும் என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக் குறிப்பிடார்.
கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக்கின் 2016ஆம் ஆண்டிற்கான பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டிலிருந்து இலங்கை தௌஹீத் ஜமாஅத் காத்தான்குடி கிளைக்கு 50,000 ரூபா பெறுமதியான ஒலி பெருக்கி சாதனங்களை வழங்கும் நிகழ்வு (01.12.2016)ஆந்திகதி காத்தான்குடி கிளை இலங்கை தௌஹீத் ஜமாஅத் பள்ளிவாயலில் இடம்பெற்றபோதே கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்;
அரசியல்வாதிகள் அனைவரும் நூறு வீதம் அல் குர்ஆன், அஸ் சுன்னாவினை புரிந்து கொண்டவர்கள் அல்ல. மனிதன் என்ற ரீதியில் அரசியல்வாதிகளும் தவறுகள் விடுவதற்கு வாய்ப்புள்ளது. அத்தகைய தவறுகளை ஊரிலுள்ள தஃவா அமைப்புக்கள் பகிரங்கமாக சுட்டிக்காட்டும் போதே அவற்றை சரிசெய்துகொள்ள முடியும்.
மேலும் குற்றங்களை புரிகின்ற பலரும் தாம் ஆதரிக்கின்ற அரசியல்வாதிகள் அதிலிருந்து தம்மை காப்பாற்றுவார்கள் என்ற ஒரு நம்பிக்கையில் குற்றங்களை புரின்கின்றனர். இத்தகைய குற்றவாளிகளுக்கு அரசியல்வாதிகள் அடைக்கலம் கொடுக்கின்ற ஒரு நிலை மாற வேண்டும்.
மேலும் எமதூரில் சிறுவர்கள் திருட்டுகளில் ஈடுபடுவதும், போதை வஸ்துகள் பாவிப்பதும் அதிகரித்து காணப்படுகின்றது. அண்மையில் எமதூரில் கடைகள் உடைக்கப்பட்டு திருடப்பட்ட சம்பவத்தில் கூட 16 வயதிற்குற்பட்ட சிறுவர்களே சம்மந்தப்பட்டிருப்பதாக அறியக்கிடைத்துள்ளது.
எனவே அரசியல் அதிகாரங்களின் மூலமாக மாத்திரம் இத்தகைய குற்றங்களை ஒழிக்க முடியாது, அதற்கு தஃவா அமைப்புக்களின் பங்களிப்புகள் மிகவும் அதிகமாக தேவைப்படுகின்றது. அத்தகைய தஃவா அமைப்புகள் தமது பணிகளை சிறந்த விதத்தில் முன்னெடுப்பதற்காக எம்மால் முடிந்த அனைத்து வகையான உதவிகளையும் பெற்றுக்கொடுப்போம் என தெரிவித்தார். இந்நிகழ்வில் காத்தான்குடி முன்னால் நகர சபை முதல்வர் மர்சூக் அஹமட்லெப்பை மற்றும் தௌஹீத் ஜமாஅத்தினுடைய அங்கத்தவர்கள் பலரும் கலந்து கொண்டனர்.


