தமிழ் - முஸ்லிம் உறவை ஆயுதப் போராட்டமே சீர்குலைத்தது - அஸ்மின்

வுனியா பூவரசங்குளம் மஹா வித்தியாலயத்திற்கான மாகாணசபை உறுப்பினர்களான கௌரவ அ.அஸ்மின் மற்றும் கௌரவ ஆர்.இந்திரராசா ஆகியோரது பிரமான அடிப்படையிலான உதவித்திட்டங்கள் இன்று (29-11-2016) அன்று பாடசாலையில் வைத்து பாடசாலை சமூகத்தினரிடம் கையளிக்கப்பட்டன. 

இதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வில் உரையாற்றும்போது வடக்கு மாகாணசபை உறுப்பினர் கௌரவ.அ.அஸ்மின் அவர்கள்:-

வடக்கு மக்களாகிய நாம் நீண்டகாலமாக ஆயுதப் போராட்டம் ஒன்றை சந்தித்தவர்கள். நாம் ஏன் அத்தகைய போராட்டம் ஒன்றை சந்தித்தோம் என்பதில் எமக்கு தெளிவான பார்வை இருக்க வேண்டும். இந்த நாட்டிலே சிறுபான்மை சமூகங்களுக்கான சம உரிமை வழங்கப்படவேண்டும் என்பதுவே எமது மக்களின் அடிப்படைக் கோரிக்கையாகும், 1948களிற்கு முன்பிருந்தே இந்த நாட்டில் அதிகாரம் குறித்த கருத்துகள் முன்வைக்கப்பட்டன. 

ஆரம்ப காலங்களில் எமது தலைவர்கள் அகிம்சை ரீதியாக ஜனநாயக ரீதியாக உரிமைக்கான போராட்டங்களை முன்னெடுத்தனர், ஆனால் அதற்கான தீர்வு கிடைக்கவில்லை, மக்கள் மத்தியில் விரக்தி ஏற்பட்டது, இதனால் எமது இளைஞர்கள் ஆயுதப் போராட்டத்தின் மீது நாட்டம் கொண்டார்கள், இதனை தமக்கு சாதகமாக ஒரு சில வெளிநாட்டு சக்திகள் எடுத்துக்கொண்டார்கள், ஆயுதப் போராட்டம் மூண்டது, இதனால் இந்த நாடு பாரிய அழிவுகளை எதிர்நோக்கியது, குறிப்பாக வடக்குக் கிழக்கு மக்கள் பாரிய இழப்புகளை எதிர்நோக்கினார்கள், யுத்தம் பொதுவாக எல்லா மக்களையும் அழித்துவிட்டது.

வடக்கிலும் கிழக்கிலும் தமிழ் மக்களையும் முஸ்லிம் மக்களையும் ஆயுதப் போராட்டமே பிரித்து வைத்தது. தமிழ் தலைவர்களால் முன்னெடுக்கப்பட்ட உரிமைப் போராட்டத்தில் முஸ்லிம் மக்களும் இணைந்தே இருந்தார்கள். இது பழைய வரலாறு, இப்போது தமிழ் மக்களும் முஸ்லிம் மக்களும் ஒருமித்து செயற்படவேண்டியதன் தேவை அதிகரித்திருக்கின்றது. குறிப்பாக 2009 யுத்த நிறைவுக்குப் பின்னர் நாம் இன்னுமொரு யுகத்தினுள் காலடி எடுத்து வைத்திருக்கின்றோம், எமது உரிமக்கான போராட்டம் இன்னும் முடிவடையவில்லை, அது தொடர்கின்றது, வழிமுறைகள் மாற்றம் கண்டிருக்கின்றன, ஆனால் எமது மக்கள் கோருகின்ற தீர்வு இன்னமும் எம்மை வந்தடையவில்லை, இப்போது நாம் கையாள்கின்ற ஜனநாயக ரீதியான வழிமுறைகளில் எமக்கு நம்பிக்கை இருக்கின்றது. அரசியல் தீர்வுதான் எமது இலக்கு; உரிமைப் போராட்டத்தை நடாத்துகின்ற ஒரு சமூகம் அபிவிருத்தியில் கவனம் செலுத்தாமல் இருக்க முடியாது. இரண்டும் சமாந்தரமாக கவனிக்கப்படவேண்டிய விடயங்களாகும். 

வடக்கு மாகாணசபை கல்வி விடயங்களில் கூடுதல் அக்கறையோடு செயற்படுகின்றது. நாம் எமது சமூகத்தை நன்கு புரிந்து வைத்திருக்கின்றோம், எமது மக்களின் தேவைகளை நாம் நன்கு புரிந்து வைத்திருக்கின்றோம், எமது மக்களுக்கான தேவைகளை நிறைவு செய்வதற்கு நாம் கடுமையாக உழைக்கவேண்டியிருக்கின்றது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இத்தகைய இரண்டு மகத்தான பணிகளையும் ஒருசேர முன்னெடுக்கின்றது. இதற்கான பலமாக மக்களாகிய நீங்களே இருக்கின்றீர்கள், உங்கள் வாழ்வில் மாற்றம் ஏற்படும் என்ற நம்பிக்கையோடு வாய்ப்புக்கு நன்றி கூறி விடைபெறுகின்றேன்.
எம்.எல்.லாபிர்-


எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -