எஸ்.என்.எஸ்.றிஸ்லி-
இம்போட்மிரர் ஊடக வலையமைப்பு நடாத்திய முழுநாள் சிறுவர் தின நிகழ்வின் காலை நேர நிகழ்வுக்கு அதிதியாக பாராளுமன்ற உறுப்பினர் அலி ஷாஹிர் மெளலானா கலந்து சிறப்பித்தார்.
சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு இம்போட் மிரர் ஊடக வலையமைப்புக் குழுமத்தினர் ஏற்பாடு செய்த சிறுவர் தின நிகழ்வு காத்தான்குடி முஸ்லிம் சிறுவர் அபிவிருத்தி நிலையத்தில் முழுநாள் நிகழ்வாக நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் எஸ்.எல்.முனாஸ் தலைமையில் வெகு சிறப்பாக இடம்பெற்றன.
சிறுவர்களுக்கான விளையாட்டு, பொது அறிவுப்போட்டிகள், பாடல் நிகழ்வுகளுடன், பணப்பரிசில்களும் பாடசாலை புத்தகப்பையும் மாணவர்களுக்கு வழங்கப்பட்டன.
இந் நிகழ்வில் அதிதியாக கலந்துகொண்ட பாராளுமன்ற உறுப்பினர் அலிஷாஹிர் மௌலானா அங்கு உரையாற்றுகையில் :-
இவ்வாறான ஒரு நிகழ்வில் நான் கலந்துகொண்டதையிட்டு மிகவும் மகிழ்ச்சியடைகின்றேன். காத்தான்குடி முஸ்லிம் அபிவிருத்தி நிலையம் மிகவும் அழகான ஒரு நிலையம். இதனை ஏற்பாடு செய்த இம்போட் மிரர் ஊடக வலையமைப்புக்கு நன்றிகளை தெரிவிக்கின்றேன்.
இன்று நல்லாட்சி மலர்ந்த காலத்திலே சிறுவர்களுக்கு எந்த எந்த விதத்தில் பாதுகாப்பு வழங்க முடியுமோ அந்தவகையில் கல்வி, சுகாதாரம் ,உணவு , பாதுகாப்பு என அனைத்திலும் நாம் ஒரு பிரகடனத்தை கொண்டுவர உருதியளித்திருக்கின்றோம்.
நபியவர்களின் வழிமுறையில் எமது சமுகம் செயல்படவேண்டும் . குதைபியா உடன்படிக்கையில் சிறுவர்கள், நோயாளிகள், பெண்கள் எந்த தாக்குதலிலும் தாக்கப்படக்கூடாது என காட்டித்தந்திருக்கிரார்கள். ஆனால் இன்று சிரியாவில் எத்தனையோ சிறுவர்கள் தாக்க்படுகின்றார்கள் என்பதை நாம் காண்கின்றோம்.
1980 களில் மர்ஹும் அசீஸ் ஆசிரியர் அவர்கள் இந்த நிலையத்தை ஆரம்பித்தார்கள். 1994 முதல் நானும் இந்த காத்தான்குடி முஸ்லிம் சிறுவர்கள் அபிவிருத்தி நிலையத்திற்கு தொடர்ந்தும் வந்திருக்கின்றேன். 94லில் இருந்து 20௦4 வரை நானும் இந்த நிலையத்திற்கு வந்து சாப்பாடு வசதிகளையும் ஏற்பாடு செய்திருக்கின்றேன் . 2004க்கு பிறகு இந்தநாட்டில் இருந்து வேறொரு சூழலிலே நாட்டைவிட்டு போகக்கூடிய சூழலில் நான் இதிலிருந்து விடுபட்டிருந்தேன். அதனை மீண்டும் எனக்கு நினைவூட்டி இந்த நிலையத்துடன் என்னை தொடர்புபடுத்திய இம்போட் மிரர் ஊடகத்திகும் அதனை நிருவகிப்போருக்கும் நான் நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றேன். என தெரிவித்தார்.