NFGG ஊடகப்பிரிவு-
தேர்தல் திருத்த நடவடிக்கைகளின் முன்னேற்றம் குறித்து தெளிவுபடுத்தும் கருத்தரங்கொன்றினை நல்லாட்சிக்கான தேசிய முன்னணி(NFGG) மூதூரில் நடாத்தியது. கடந்த 07.08.2016 அன்று FM ஷாபி அவர்களின் தலைமையில் மூதூர் CCCD கேட்போர் மண்டபத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில் NFGGயினர் பொதுச் செயலாளர் நஜா முஹம்மட், அதன் தவிசாளர் பொறியியலாளர் அப்துர் ரஹ்மான் ஆகியோர் கலந்து கொண்டு விசேட தெளிவுரைகளை ஆற்றினர். இந்நிகழ்வானது NFGG a யின் திருமலை பிராந்திய சபையினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
புதிய யாப்புருவாக்கத்தில் தேர்தல் திருத்தம் என்பது ஒரு முக்கிய பகுதியாகும். தற்போது நடைமுறையிலுள்ள விகிதாசார முறையினை மாற்றியமைத்து தொகுதிகளுக்குப் பொறுப்பான பாராளுமன்ற உறுப்பினர்களை உருவாக்கும் வகையிலும் விருப்புவாக்கு முறையினை இல்லாமல் செய்யும் வகையிலும் புதியதொரு தேர்தல் முறையொன்றை உருவாக்கும் முயற்சிகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
புதிய தேர்தல் முறையில் சிறுபான்மை மக்களின் பாராளுமன்றப் பிரதிநிதித்துவத்தை உறுதி செய்வதென்பது முக்கியமான ஒன்றாக மாறியிருக்கிறது. இந்த விடயங்களில் NFGG ஆரம்பமுதலே தீவிர கவனம் செலுத்தி வருகிறது. அந்த வகையில் தேர்தல் திருத்தம் தொடர்பான பல்வேறு மட்ட கலந்துரையாடல்களிலும் NFGGயின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு காத்திரமான பங்காற்றிவருகின்றார்கள்.
தேர்தல் திருத்தம் தொடர்பில் அரசாங்கத்திற்கு ஆலோசனை வழங்கும் சர்வதேச மற்றும் உள்ளுர் நிபுணர்களோடும் தொடர்ச்சியான கலந்துரையாடல்களையும் பேச்சு வார்த்தைகளையும் NFGGயினர் மேற்கொண்டு வருகின்றனர்.
இவ்விடயம் தொடர்பில் தற்போது வரை ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் மற்றும் அதனோடு தொடர்பு பட்ட பல்வேறு விடயங்களை சிவில் சமூகப் பிரதிநிதிகளுக்கு அறிவுறுத்துவதற்காகவும் அவர்களின் மேலதிக கருத்துக்களைப் பெற்றுக் கொள்வதற்காகவும் பரவலான கருத்தரங்குகளை நடாத்த NFGG திட்டமிட்டுள்ளது.
அந்த வகையிலேயே மூதூர்ப்பகுதியிலும் குறித்த கலந்துரையாடல் நடாத்தப்பட்டது. இந்தக் கலந்துரையாடலில் NFGG யின் திருமலப் பிரதேச பிராந்திய சபை உறுப்பினர்களான LM.சிப்லி, RM. றினூஸ், முகம்மட் அப்பாஸ் , ALM அஹ்சான் , AW. ஜிஹாக் உள்ளிட்ட பலரும், மேலும் பல சிவில் சமூகப் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.
இந்நகழ்வின் இறுதியில் கேட்கப்பட் கேள்விகளுக்கும், சந்தேகங்களுக்கும் உரிய விளக்கங்களை பொறியியலாளர் அப்துர் ரஹ்மானும் நஜா மொகமட் அவர்களும் வழங்கினார்.