நம் சமூகத்தில் இருக்கும் அரசியல் தலைவர்களுக்கு ஆலோசனை கூறி வழிகாட்ட அறிஞர்களைக் கொண்ட குழுவை இலங்கை வரலாற்றிலேயே முஸ்லிம்கள் அமைத்துக் கொள்ள வில்லை. மாறாக, முஸ்லிம் தலைவர்கள் அறிஞர்களை ஓரம் கட்டியே தங்கள் அரசியலை நடத்தி வந்தனர். தொடர்ந்து அறிவுசார்ந்த பெருமக்களை உதாசீனப்படுத்தியதுடன், புதுப் பணக்காரர்களாலும், சண்டியர்களாலும் முஸ்லிம் கட்சிகளை நிறப்பிக் கொண்டிருந்தனர்.
இதனால் வெறுப்படைந்த பல நுண்ணறிவாளர்கள் வெளி நாடுகளுக்குச் சென்று குடியேற வேண்டிய ஒரு நிலை ஏற்பட்டது. அத்துடன் நாட்டுக்குள் இருந்த சில அறிஞர்களும் சமுதாயத்தையும் நாட்டையும் பாதிக்கும் பிரச்சினைகளில் தங்கள் கருத்துக்களைச் சொல்ல தளங்கள் அமைத்துக் கொடுக்கப்பட வில்லை.
ஆகவே அவர்களும் மெளனமாய் இருக்க வேண்டிய ஒரு நிலையே உருவாகம் பெற்றது. 1970க்குப் பிறகு துவங்கிய அரசியல் வன்முறை தலைதூக்க ஆரம்பித்ததும் அந்த அறிவுசால் பெருமக்கள் தங்கள் வாயையே திறப்பதில்லை. துரதிர்ஷ்ட மாக அஷ்ரப் மறைந்தவுடன் முஸ்லிம் அரசியல் உலகம் தலைமையின்றி வெற்றிடமாக மாறியது.
இப்போது வரலாற்றில் இல்லாத அளவு மிக அதிக அளவில் முஸ்லிம் அரசியல் வாதிகளும் அமைச்சர்களும் இருக்கின்ற போதும். முஸ்லிம் மக்களின் அன்றாடப் பிரச்சினைகள் முன் இருந்ததை விட அதிகமாகிக் கொண்டே இருக்கின்றன. அதற்கு முக்கிய காரணம் அவர்கள் தலைமைத்துவ போட்டியால் பல கட்சிகளாகப் பிரிந்து நிற்பதுதான். அத்துடன், இவர்கள் யாருக்கும் தங்கள் சமுதாயத்தை தேசிய அளவில் கொண்டு செல்லும் அளவுக்கு அறிவும் ஆற்றலும் முன்னோக்குப் பார்வையும் இல்லை என்பது மிகவும் கசப்பான உண்மை.
இவர்கள் தங்கள் சமுதாயத்தை இருள் சூழ்ந்த கண்ணுக்குத் தெரியாத பாதையில் அழைத்துச் செல்கிறார்கள். நிர்வாகத் திறன் கொண்ட ஒரு தலைமை உருவாவது இப்போதைய காலத்தின் கட்டாயம். இஸ்லாமிய ஷரீஅத் சட்டப்படி இது தனிப்பட்ட ஒருவரின் சமயக் கடமை மட்டுமல்ல; ஒட்டுமொத்த சமுதாயத்தின் மீதும் கட்டாயக் கடமையாகும். இதனை உணர நம் இளைஞர்கள், பெரியவர்கள், மற்றும் அனைத்துத் தரப்பி்னரும் முன்வர வேண்டும், இல்லை என்றால் உங்கள் பிள்ளைகளை நீங்களே ஒரு இருண்ட யுகத்துக்கு அழைத்துச் சென்று கொண்டிருப்பதை யாராலும் தடுத்து நிறுத்த முடியாமல் போய் விடும்.