அரசியலமைப்பு விதியின் படி ஒன்றுக்கு மேற்பட்ட சபைகள் சேர்ந்து இயங்க விரும்பினால், அவை தீர்மானம் இயற்றலாம். அவ்வாறு இயற்றப்படும் தீர்மானம், பாராளுமன்றத்திற்குக் கொண்டு செல்லப்பட வேண்டும். பாராளுமன்றத்தில் வாக்கடுப்புக்கு விடப்பட்டு மூன்றில் இரண்டு பெரும்பானமையால் நிறைவேற்றப்பட வேண்டும். அவ்வாறு மூன்றில் இரண்டு பெரும்பான்மையால் நிறைவேற்றப்படவில்லையாயின் அது செல்லு படியாகாது.
இதே விதிதான் வடக்கு - கிழக்கு இணைப்புக்கும் செல்லுபடியானதே தவிர, வடக்கு - கிழக்கு இணைப்பிற்கு என்று புதிய விதிகள் கிடையாது. இவ்வாறான நிலையில், வடக்கு - கிழக்கு இணைப்பைப் பற்றி தமிழர்களோ அல்லது முஸ்லிம்களோ பேசுவதற்கு முன்னர், பெரும்பான்மைக் கட்சிகளுக்கிடையே இணக்கப்பாடு காணப்பட வேண்டுமே தவிர, சம்மந்தனும் ஹக்கீமும் பேசிக்கொள்வதில் பிரயோஜனம் இல்லை.
சம்மந்தனும் ஹக்கீமும் பேசிக்கொள்வதிலேயே பிரயோஜனம் இல்லாத விடயத்தை நமது சிறுசுகள் பேசிக்கொள்வதில் என்னதான் பிரயோசனமோ? எனக்குத் தெரியாது. பெரும்பான்மைக் கட்சிகளில் அதிகாரப் பகிர்வுக்கு மிகச் சாதகமான கட்சியாகக் கருதப்படும் ஐக்கிய தேசியக் கட்சியில் உள்ள பாராளுமன்ற உறுப்பினர்களில் எத்தனை பேர் வடக்கு - கிழக்கு இணைப்புக்குக் கையுயர்த்துவார்கள்? அவ்வாறு கையுயர்த்தினால் தாம் ''பிரிவினைக்கு வழி கோருபவர்கள்'' என்று முத்திரை குத்தப்பட்டு தமது அரசியல் வாழ்வுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு விடும் என்ற அச்சத்தில் ஒருவர் கையுயர்த்தினாலே பெரிய விடயமாக அமையும்.
அதிகாரப் பகிர்வுக்கு மிகச் சாதகமான கட்சியாகக் கருதப்படும் ஐக்கிய தேசியக் கட்சியில் உள்ள பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவைப் பெறுவதே இப்படிக் கஷ்டமென்றால், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஆதரவு முயற்கொம்பாகவே அமையும். இவ்வாறு, பெரும்பான்மைக் கட்சிகளின் ஆதரவைப் பெற முடியாத; சாத்தியமற்ற விடயத்தைப் பற்றிப் பேசுவது எவ்வளவு சாமர்த்தியமானது என எமக்கென்றால் விளங்கவில்லை. அவ்வாறு பேசி தமிழ் சமூகத்தோடு ஏன் முஸ்லிம்கள் முட்டிக் கொள்ள வேண்டும்.
வடக்கு - கிழக்கு இணைப்பிற்குத் தேவையான மூன்றில் இரண்டு பெரும்பானமையைப் பெறுவதற்குத் தேவையாக இருக்கும் நூற்றி ஐம்பது பாராளுமன்ற உறுப்பினர்களில், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஏழு பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவை தள்ளி, மீதி 143 பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவுடன் யாரும் வடக்கு - கிழக்கு இணைப்பைப் பற்றிப் பேச வந்தால், அப்போது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வாய் திறக்கும். அதுவரை வீணாகப் பேசி தமிழ் - முஸ்லிம் உறவைக் குலைக்க நாம் தயாரில்லை.