நமது நாடும் நாமும் என்ன செய்து கொண்டிருக்கிறோம், அரசியல்வாதிகளைப் பற்றியே ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கிறோம், இது மிகவும் வருந்தத்தக்க விடயமாகும் என தேசிய ஜனநாயக மனித உரிமைகள் கட்சி இஸ்தாபகர் மொஹிடீன் பாவா கூறினார்
மனித, மற்றும் நில வளத்தை முழுமையாகப் பயன்படுத்தி வேளாண்மை மற்றும் விவசாய உற்பத்தியை பெருக்க வேண்டிய கட்டாய சூழ்நிலையில் நாம் உள்ளோம். வளர்ந்த நாடுகளை ஒப்பிடும் போது ஒரு ஏக்கருக்கு 4ல் ஒரு பங்கு மட்டுமே இலங்கையில் உற்பத்தி செய்து கொண்டிருக்கிறோம். வேளாண்மை உற்பத்தியில் வளர்ச்சி இருந்தாலும், உற்பத்திப் பொருட்கள் எல்லோருக்கும் கிடைக்கச் செய்தல் வேண்டும். ஒவ்வொரு மனிதனும் அடிப்படைத் தேவையில் சுயசார்புடன் வாழக்கூடிய சூழ்நிலை உருவாக வேண்டும். இதற்கு இயற்கை வளங்களை முழுமையாகப் பயன்படுத்த வேண்டும். அதே சமயம், எல்லோருக்கும் அவை பாரபட்சம் இல்லாமல் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும். சிறு தொழில்களை, குடிசை தொழில்களைப் பாதுகாப்பது உண்மையான வளர்ச்சிக்கு வழிவகுக்கும். நாட்டின் உண்மையான சமூகப் பாதுகாப்பு என்பது மனிதனின் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்வேதோடு மட்டுமின்றி மனித வாழ்வாதாரங்களைப் பெருக்கச் செய்வதே இவ்வாறு தேசிய ஜனநாயக மனித உரிமைகள் கட்சி இஸ்தாபகர் மொஹிடீன் பாவா கூறினார்
மேலும் கூறுகையில் வளர்ச்சியென்பது நாட்டின் தேசிய வருமானமும், தனிநபர் வருவாயும், அன்னியச் செலாவணி இருப்பும், அன்னிய முதலீடும் மட்டுமே ஆகாது. நாட்டில் உள்ள அனைவரும் நல்ல உடல் ஆரோக்கியத்தோடும், நல்ல மனநிலையோடும் வாழக்கூடிய சூழல் உருவாக வேண்டும். அதற்கு உணவு, உடை, உறைவிடம், கல்வி, மருத்துவம், சுகாதாரம், வேலைவாய்ப்பு போன்றவை எல்லோருக்கும் பாரபட்சம் இல்லாமல் கிடைக்கச் செய்தல் வேண்டும் என்றார்