சிரிய போருக்கு எதிரான செயல்பாட்டாளர்கள் நேற்று (வியாழக்கிழமை) வெளியிட்ட ஒரு சிறுவனின் புகைப்படம் சிரியாவில் நடைபெறும் உள்நாட்டு யுத்தத்தை பார்ப்பவர் கண்முன்னே கொண்டு வருகிறது.
அந்த புகைப்படத்தில் தூசி படிந்த உடலில் தலையில் ரத்த காயங்களுடன் அச்சிறுவன் குழுப்பமான மனநிலையில் அமர்ந்திருக்கிறான். அடிக்கடி தனது காயங்களை தொட்டுப் பார்கிறான் இந்த புகைப்படம்தான் பரவலாக சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.
அப்புகைபடத்தில் நீங்கள் பார்க்கும் சிறுவனின் பெயர் ஒம்ரான் டாக்னீஷ். ஐந்து வயதான ஒம்ரான் உள் நாட்டு சிரிய போரால் தரைமட்டமான தனது வீட்டிலிருந்து மீட்புப் படையினரால் வெளியே கொண்டு வரப்பட்டு அங்கிருந்த ஆம்புலன்ஸ் ஒன்றில் அம்ர்ந்திருக்கும் போது இந்த புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளது.
இந்த புகைப்படத்தை எடுத்த புகைப்பட கலைஞர் மஹ்மூத் ரஸ்லான் கூறும் போது,
"ஒம்ரான் மீட்கப்படுவதற்கு முன்னதாக மூன்று உயிரற்ற உடல்களை இடிந்த கட்டிடத்திலிருந்து மீட்டோம். நான்காவதாகத்தான் காயங்களுடன் ஒம்ரான் எங்கள் கைகளுக்கு கிடைத்தான் உடனடியாக அவனை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தோம்.
ஒம்ரானுடன் அவனது உடன் பிறந்தவர்களும் அவனது பெற்றோரும் மீட்கப்பட்டனர். ஒம்ரானுக்கு இரண்டாம் முறை வாழ்க்கை கிடைத்துள்ளது" என்றார்.
அலெப்போ மருத்துவமனையில் சிகிச்சைகாக சேர்க்கப்பட்டுள்ள ஒம்ரானுக்கு ஆபத்தான காயங்கள் ஏதும் ஏற்படவில்லை என ஓம்ரானை பரிசோதித்த மருத்துவர் தெரிவித்துள்ளார்.
கடந்த வருடம் சிரியாவைச் சேர்ந்த அய்லான் என்ற சிறுவன் துருக்கி கடற்கரையில் இறந்த நிலையிலிருந்த புகைப்படம் அனைவர் மனதிலும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.