மாத்தறையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த முச்சக்கரவண்டி காலியிலிருந்து மாத்தறை நோக்கி பயணித்த பஸ்ஸில் மோதுண்டு விபத்திற்குள்ளாகியுள்ளது. குறித்த விபத்தில் காலி கரந்தெனிய உதுரு மால பிரதேசத்தில் வசிக்கும் 25 வயது நிரம்பிய நிறைமாத கர்ப்பணித்தாயான சந்திரிக்கா பிரியதர்ஷனி என்பவரே உயிரிழந்துள்ளார்.
இதேவேளை விபத்தில் உயிரிழந்த தாயாருக்கு 8 வயது நிரம்பிய பிள்ளையொன்று இருப்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
நிறைமாத கர்ப்பணி தாயாகிய இவருக்கு நேற்றிரவு பிரசவவலி ஏற்பட்டமையால் குறித்த தாயின் கணவர் இவரை வைத்தியசாலைக்கு முச்சக்கரவண்டியில் அழைத்து செல்லும் போது குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்து இடம்பெற்ற பிறகு அதே முச்சக்கரவண்டியில் குறித்த தாயாரை ஏற்றிக்கொண்டு காலி மஹாமோதர வைத்தியசாலைக்கு அழைத்து சென்றுள்ளார்.
அங்கு குறித்த பெண்ணை பரிசோதித்த வைத்தியர்கள் தாயார் உயிரிழந்துள்ளமையினை அறிந்து வயிற்றிலிருந்த குழந்தையினை காப்பாற்ற உடனடியாக சத்திரசிகிச்சையினை மேற்கொண்டு குழந்தையின் உயிரை காப்பாற்றியுள்ளனர். குறித்த விபத்தை ஏற்படுத்திய பஸ்ஸின் சாரதி தலைமறைவாகியுள்ள நிலையில் பொலிஸார் அவரை தேடி வருகின்றனர். மேலும், முச்சக்கரவண்டியின் சாரதி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.