அப்துல்சலாம் யாசிம்-
திருகோணமலை - சிங்ஹபுர பகுதியில் 19 வயதுடைய இளம் யுவதியின் சடலமொன்றினை இன்று (26) காலை திருகோணமலை தலைமையக பொலிஸார் மீட்டுள்ளனர். இவ்வாறு மீட்கப்பட்ட சடலம் ரத்னபுர-கலவான பகுதியைச்சேர்ந்த அசினிகா (19 வயது) திருமணமாகிய யுவதியின் சடலமெனவும் பொலிஸ் ஆரம்பகட்ட விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளது.
குறித்த இளம் யுவதி அம்பலாங்கொட பகுதியைச்சேர்ந்த சீமெந்து தொழிற்சாலையில் ஒப்பந்த அடிப்படையில் வேலை செய்து வரும் நுவன் சந்தன அபேவிக்ரம என்பவரை திருமணம் செய்து வாடகைக்கு வீட்டொன்றினை பெற்று இருவரும் வீடொன்றில் வாழ்ந்து வந்ததாகவும் தெரியவருகின்றது.
குறித்த இளம் பெண்னை கொலை செய்து துணியால் மூடியுள்ளதாகவும் எவ்வாறு கொலை செய்யப்பட்டது தொடர்பாக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் கணவர் தலைமறைவாகியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். கொலை தொடர்பான விசாரணைகளை திருகோணமலை தலைமையக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.