எம்.ஜே.எம். சஜீத்-
ஒலுவில் பிரதேச கடலரிப்பு தொடர்பாக ஜனாதிபதி, பிரதமருடன் கிழக்கு மாகாண முதலமைச்சர் தொடர்பு கொண்டு அவசர நடவடிக்கைகளை மேற்கொண்டு ஒலுவில் பிரதேசத்தை காப்பாற்ற வேண்டும் - கிழக்கு மாகாண சபை எதிர்க்கட்சி தலைவர் எம்.எஸ்.உதுமாலெப்பை
முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் மர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரப் அவர்களினால் கிழக்கு மாகாண மக்களின் பொருளாதார வளர்ச்சியை நோக்கமாகக் கொண்டு ஒலுவில் துறைமுகம் அமைக்கப்பட்டது.
ஒலுவில் பிரதேச மக்களுக்குச் சொந்தமான காணிகள் தென்கிழக்கு பல்கலைக்கழகம், ஒலுவில் துறைமுகம், மாபொல பயிற்சி நிலையம், துறைமுக சுற்றுலா விடுதி, வீடமைப்புத் திட்டம் என சுவீகரிக்கப்பட்டுள்ளது. இறுதியாக ஒலுவில் மக்கள் வாழும் காணிகளும், குடியிருப்புகளும் படிப்படியாக கடலரிப்புக்குள்ளாகி வருகின்றன.
எனவே ஒலுவில் பிரதேச கடல் அரிப்பு தொடர்பாக கிழக்கு மாகாண முதலமைச்சர் அதி கௌரவ ஜனாதிபதி, கௌரவ பிரதமரிடம் ஒலுவில் நிலமையை தெளிவுபடுத்தி அவசர நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.தவமினால் ஒலுவில் பிரதேச கரையோரங்கள் கடலரிப்புக்குள்ளாகி வருவதனை தடுக்க அவசர நடவடிக்கைகளை மேற்கொள் வேண்டும் என கிழக்கு மாகாண சபை அமர்வு திரு.சந்திரதாச கலப்பதி தலைமையில் நடைபெற்ற கிழக்கு மாகாண சபையில் சமர்ப்பித்த அவசரப் பிரேரனையில் கலந்து கொண்டு உரையாற்றிய கிழக்கு மாகாண சபை எதிர்க்கட்சித் தலைவர் எம்.எஸ்.உதுமாலெப்பை குறிப்பிட்டார்.
மேலும் தெரிவிக்கையில்....
ஒலுவில் மக்கள் இந்த விடயத்தில் பாரிய நஸ்டங்களை அனுபவித்து வருகின்றனர். தங்களின் வாழ்வாதார நிலங்களை முற்றாக இழந்துள்ளனர். இக் கடல் அரிப்பு ஒலுவில் கிராமத்தையே அழித்து வருவதுடன் இக்கிராம மக்களின் குடியிருப்புகள் கடலுக்குள் படிப்படியாக சங்கமித்தும் வருகின்றது.
இப்பிரதேச மக்கள் தினமும் அச்ச உணர்வுடன் வாழும் நிலமை உருவாகியுள்ளது. எனவே, இந்த விடயத்தில் அவசர நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட வேண்டும். ஒலுவில் பிரதேச மக்கள் இந்த விடயத்தில் அதிருப்தியுடன் உள்ளனர். தங்களின் உணர்வுகளை தொடர்ந்து தெரிவித்து வருகின்றனர். இப்பிரதேச மக்கள் 90வீதமானவர்கள் எப்போதும் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியை ஆதரிப்பவர்கள். நமது நாட்டில் ஏற்பட்டுள்ள நல்ல சூழ்நிலையை பயன்படுத்தி ஒலுவில் மக்களின் கடல் அரிப்பு பிரச்சினைக்கு அவசர தீர்வினை வழங்க வேண்டும்.
பல அரசியல் தலைவர்களும், அமைச்சர்களும் இப் பிரதேசத்திற்கு விஜயம் செய்து இப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு முயற்சிகளை மேற்கொண்ட போதும் இதுவரை இப்பிரச்சினை தீர்க்கப்படாமல் உள்ளது. இலங்கை துறைமுக அதிகார சபையும் கரையோர பாதுகாப்பு சபையும் இந்த விடயத்தில் கூடிய அக்கரை செலுத்த வேண்டியுள்ளது.
ஒலுவில், நிந்தவூர் போன்ற பிரதேசங்களில் அமைந்துள்ள சுமார் 18ஆயிரம் விவசாயக் காணிகளில் கடல் நீர் உட்செல்வதால் பாரிய நஷ்டங்கள் இப்பிரதேச விவசாயிகளுக்கு ஏற்பட்டு வருகின்றது. அவ்வப்போது அம்பாறை மாவட்ட நீர்ப்பாசன திணைக்களம் தற்காலிக நடவடிக்கைகளை மேற்கொண்ட போதும் இந்த பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணப்படாத நிலமை தொடர்கின்றது.
எனவே, ஒலுவில் கடலரிப்பு விடயத்தில் உயர் மட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு அதி கௌரவ ஜனாதிபதி, கௌரவ பிரதமருடன் தொடர்பு கொண்டு இப்பிரச்சினைக்கான நிரந்தர தீர்வு மேற்கொள்ளப்பட வேண்டும் எனக் குறிப்பிட்டார்.