கல்முனை, சாய்ந்தமருது புத்திஜீவிகளுடனான சந்திப்பின் போதே இவ்வாறு அவர் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது,
ஒரு காலத்தில் கல்முனை என்பது கல்வியின் சிகரமாக இருந்தது. கிழக்கு மாகாண முஸ்லிம்கள் விரும்பி வந்து கல்வி பெரும் கல்வி முனையாக கல்முனை இருந்தது. அத்துடன் முஸ்லிம் பெண் கல்விக்கு கல்முனை பாளிகா பெண்கள் பாடசாலை அளப்பரிய சேவைகளை செய்துள்ளது. தற்போது கல்முனையின் கல்வி பாரிய வீழ்ச்சி பெற்று வருவதுடன் பாளிகா பெண்கள் பாடசாலையின் கல்வியும் சிலரால் பாழ்படுத்தப்படுகின்றது.
பல தரமான ஆசியர்களை கொண்டு சிறப்பாக இயங்கிய இப்பாடசாலையின் தரமான ஆசிரியர்கள் பலர் வேறிடங்களுக்கு அநியாயமாக மாற்றப்படுவதால்; தரமான ஆசிரியர் பற்றாக்குறை நிலவுகிறது. இதன் காரணமாக மாணவிகளுக்கான உயர் தர பிரத்தியேக வகுப்புக்கள் நடாத்தப்படுவதில்லை என்றும்; பெண்களுக்கான இப்பாடசாலையின் பாதுகாப்பும் படிப்படியாக அருகி வருவதாக பல பெற்றோர்கள் தினமும் உலமா கட்சிக்கு தொலை பேசி வாயிலாக அறிவித்துக் கொண்டிருக்கிறார்கள்.
கல்முனை கல்வி வலயத்தின் உயர் அதிகாரிகள் கூட இப்பாடசாலையை மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் பார்ப்பதாகவும் இதன் காரணமாக பல தரமான ஆசிரியர்கள் தூக்கியெறியப்படுவதாகவும் முறைப்பாடுகள் கிடைக்கப்பெறுகின்றன.
அதே போல் கல்முனை மக்கள் கல்வியில் பின்னடைந்ததன் காரணமாக தமக்கான கிராம சேவகர்களைக்கூட பிற பிரதேசத்திலிருந்த பெற வேண்டிய அளவுக்கு ஆதி காலத்தை நோக்கி சென்று கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் கல்முனை மக்களின் அதிகப்படியான வாக்ககளை பெற்ற ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் அதிகாரம் பெற்ற அரசியல்வாதிகளும் அக்கட்சியின் தலைவரும் கல்முனையின் கல்வியை பற்றி கொஞ்சம் கூட கருத்தில் எடுக்காமல் உறங்கு நிலையில் இருப்பது கண்டிக்கப்பட வேண்டிய ஒன்றாகும்.
கல்முனையின் கல்விக்காக ஒரு காலத்தில் அரும் பாடுபட்ட எம் எஸ் காரியப்பர், எம் சி அஹ்மத் போன்ற அரசியல்வாதிகளைக்கண்ட கல்முனை இன்று குப்பை அரசியல்வாதிகளால் நிறைந்து கல்வியிலும் வீழ்ச்சி கண்டு வருவதை இன்னமும் நாம் பார்த்துக்கொண்டிருக்க முடியாது. கல்முனையின் அபிவிருத்தி என்பது வீதிகள், மக்களின் வாழ்க்கை தரம் என்பவற்றோடு மட்டுமல்லாமல் கல்வியும் மிக முக்கியமாக அபிவிருத்தி செய்யப்பட வேண்டும்.
இதற்காக கல்முனை மாநகர மக்களும் புத்திஜீவிகளும் விழிப்படைந்து இத்தகைய அரசியல்வாதிகளுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் கூட்டங்கள், கருத்தரங்ககள் ஏற்பாடு செய்ய வேண்டும். அத்தகைய கூட்டங்களில் முஸ்லிம் சமூகத்துக்காக பேசும் எதிர் அரசியல்வாதிகளை பிரதானமாக கலந்து கொள்ளச்செய்வதன் மூலம் உறக்கத்திலிருக்கும் அரசியல்வாதிகளை விழிப்பு நிலைக்கு கொண்டு வர முடியும் என முபாறக் மௌலவி மேலும் தெரிவித்தார்.