ஜே.வி.பியினர் மேற்கொண்ட முறைப்பாட்டிற்கு அமையவே நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச கைது செய்யப்பட்டதாக தெரிவித்துள்ள ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் மின்சக்தி எரிசக்தி பிரதியமைச்சர், அஜித் பி பெரேரா அரசியல் பழிவாங்கள் என்ற குற்றச்சாட்டை நிராகரித்துள்ளார்.
எனினும் அரசாங்கத்தின் இந்த கூற்றை முற்றாக நிராகரிக்கும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச யாரை கைது செய்வது என்பதை அமைச்சர்களே தீர்மானிப்பதாக குற்றம்சாட்டினார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்புகளிலேயே ஆளும், கூட்டு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இந்த கருத்துக்களை வெளியிட்டுள்ளனர்.
அமைச்சரவை தீர்மானங்களை வெளியிடும் ஊடகவியாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட பிரதியமைச்சர் அஜித் பி பெரேரா, “நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள விடயம் தொடர்பில் அவரது தந்தையும், முன்னாள் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ச பல்வேறு கருத்துக்களை வெளியிட்டு வருகின்றார். உங்களுக்கு சந்தோசமா என அரசாங்கத்திடமும் நாட்டிடமும் கேட்கிறார். எங்களுக்கு மகிழ்ச்சியும் இல்லை, கவலையும் இல்லை.
நாட்டின் நீதிக் கட்டமைப்பு செயற்படுகின்ற விதத்தையே இந்த செயற்பாடுகள் காட்டி நிற்கின்றன. நாமல் ராஜபக்சவிற்கு எதிராக முதலாவதாக முறைப்பாட்டினை செய்தது ஊழலுக்கு எதிரான மக்கள் குரல் அமைப்பின் ஏற்பாட்டாளர் வசந்த சமரசிங்க. இது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்கும் பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவு, இந்த வருடம் ஜனவரி மாதம் 3ஆம் திகதி தனது முதலாவது பி அறிக்கையை சமர்ப்பித்தது.
ஆகவே ஆறு மாதங்களுக்கு மேல் விசாரணைகள் இடம்பெற்று, எவ்வித அரசியல் நோக்கமும் அற்ற நிலையில், ஊழலுக்கு எதிரான ஒருவரால் செய்யப்பட்ட முறைப்பாட்டிற்கு அமையவே நடவடிக்கை எடுக்கப்பட்டது.
ஆகவே தனிப்பட்ட காரணங்களுக்காக, நாமலை கைது செய்ய வேண்டிய தேவை ஐக்கிய தேசியக் கட்சிக்கோ, அரசாங்கத்திற்கோ இல்லை.
இந்நிலையில் இன்று மைத்திரி – ரணில் அரசாங்கத்திற்கு எதிராக கண்டியிலிருந்து – கொழும்பு வரை பாதயாத்திரையொன்றை நடத்தத் தீர்மானித்துள்ள கூட்டுஎதிர்க்கட்சியினர், அது குறித்த விசேட கலந்துரையாடலொன்றை இன்று கொழும்பில் நடத்தினர்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையில் இந்த கலந்துரையாடல் அவரது மக்கள் தொடர்பாடல் அலுவலகத்தில் இடம்பெற்றது.
இந்த நிகழ்வில் பங்கேற்றதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட மஹிந்த ராஜபக்ச “நல்லாட்சி அரசாங்கத்திலுள்ள அமைச்சர்களின் தீர்மானத்தின்படியே நாமல் ராஜபக்ச கைது செய்யப்பட்டார். நாளை அவரை கைது செய்வோம் என்று கூறிவிட்டு கைது செய்கிறார்கள். இதுவா இந்த நாட்டின் சட்டம்? இந்த நடவடிக்கையின் ஊடாக சட்டத்திற்கு கலங்கம் ஏற்பட்டிருக்கிறது. நல்லாட்சி அரசாங்கமே இதனை செய்கின்றது.“ எனக் குறிப்பிட்டார்.