எமது பெரும்பான்மை பாதுகாக்கப்படுவதை சந்தேகத்துக்கு இடமின்றி உறுதிப்படுத்துவதாக இருந்தால் வடக்கு, கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்பட வேண்டும். அதனை முஸ்லிம்கள் ஏற்றுக்கொள்ள வேண்டுமென்பதை அன்பாகவும் தாழ்மையாகவும் கேட்டுக்கொள்ள விரும்புகிறேன். அவ்வாறு வடக்கு, கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்பட்டால் முஸ்லிம் ஒருவரை எமது முதலமைச்சராக ஏற்றுக்கொள்வதற்கு நாம் எப்போதும் தயாராகவிருக்கின்றோம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
அதனை முஸ்லிம் தலைவர்களும் மக்களும் ஏற்றுக்கொள்ள வேண்டும். ஒரு தமிழர் தான் முதலமைச்சராக இருக்க வேண்டும் என்பதற்காக நாம் அவ்வாறு கூறவில்லை. ஒரு பக்குவமான, படித்த முஸ்லிம் நபரை எமது முதலமைச்சராக ஏற்றுக்கள்வதற்கு நாம் தயாராகவிருக்கிறோம் எனவும் இரா. சம்பந்தன் மேலும் தெரிவித்தார்.
கொழும்புத் தமிழ்ச் சங்க சங்கரப்பிள்ளை மண்டபத்தில் நடைபெற்ற "தமிழ் அரச ஊழியர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி" என்ற நூல்களின் வெளியீட்டு நிகழ்வில் கலந்துகொண்ட போதே இரா. சம்பந்தன் இவ்வாறு தெரிவித்தார்.