எப்.முபாரக்-
திருகோணமலை சம்பூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் பன்னிரண்டு வயதுதுடைய சிறுமியொருவரின் கையைப்பிடித்திழுத்த நபர் ஒருவரை இம்மாதம் 22ஆம் திகதி வரை விளக்கமறியல் வைக்குமாறு மூதூர் நீதிமன்ற நீதிவான் ஐ.என்.றிஸ்வான் நேற்று செவ்வாய்கிழமை (19) உத்தரவிட்டார்.
சம்பூர், மூதூர் 5, பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய ஒருவரே விளக்கமறியல் வைக்கப்பட்டுள்ளார். குறித்த சந்தேக நபர் கூனித்தீவு பகுதிக்குச் சென்று அங்கே கடைக்குச் சென்ற சிறுமியொருவரின் கையினைப் பிடித்திழுத்ததாக சம்பூர் பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டையடுத்து திங்கட்கிழமை (18) மாலையில் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
குறித்த சந்தேக நபரை செவ்வாய்கிழமை பொலிஸார் மூதூர் நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போதே விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார். சம்பவம் தொடர்பான விசாரணைகளை சம்பூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.