எனது நண்பர் ஹாபிஸ் நஸீர் அஹமதிற்கும் முஸ்லிம் காங்கிரசிற்குமிடையில் 2010 ஆம் ஆண்டு சமரச பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டு அவர் மாகாண சபை தேர்தலில் போட்டியிடுவதற்கும், தேர்தலின் பின் சந்தர்பங்கள் சாதகமாக இருந்தால் மாகாண அமைச்சு வழங்கப்படுவதற்கும் இணக்கப்பாடுகளை எய்துவதற்கும் முழுமையாக எனது பங்களிப்பே காரணமாக இருந்தது.
முஸ்லிம் காங்கிரஸ் தாருஸ்ஸலாம் தலைமையகம் தொடர்பான சர்ச்சைகள் ஓரளவு அதன் மூலம் முடிவிற்கு கொண்டுவரப்பட்டது.
சாம்பூர் பாடசாலை திறப்பு விழாவில் நண்பர் முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமது அவர்கள் இராஜ தந்திர நெறிமுறைகள் குறித்து கடற்படை அதிகாரியை பகிரங்கமாக கடிந்து கொண்டமை அடிப்படை மானுட விழுமியங்களுடன் முரண் படுவதால் பலரும் கண்டித்திருக்கின்றார்கள், அவரும் மனம் வருந்தி மன்னிப்பும் கேட்டிருக்கின்றார்.
அவருடைய செயற்பாட்டை அங்கீகரிக்காது கண்டிக்கின்ற அதேவேளை அவர் ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு அனுப்பிவைத்துள்ள கடிதம் அதன் உள்ளடக்கம் சரியான தென்றே கருதுகின்றேன்.
எமது இலக்குகள் தூய்மையாக இருந்தால் மாத்திரம் போதாது அவற்றை நாம் அடிகின்ற வழிமுறைகளும் தூய்மையானவையாக இருப்பதனையே எமது சன்மார்க்க நெறிமுறைகள் வலியுறுத்துகின்றன, சரியான இலக்குகளையடைய பிழையான வழிமுறைகள் கைக்கொள்ளப்படும் பொழுது நிலைமைகள் மென்மேலும் சிக்கலாகி விடுகின்றன என்பதே உண்மையாகும்.
சுய கௌரவத்திற்கு இழுக்கு ஏற்படும் பொழுது மாத்திரம் சமூகத்தின் கௌரவத்தை பற்றி பேசுவதை தவிர்த்து சமுதாயத்தின் கௌரவத்திற்கு இழுக்கு ஏற்படும் காலமெலாம் சுய கௌரவத்திற்கான இழுக்கு ஏற்படுதாக எண்ணி அனுதினமும் அரசியல் செய்வதே போராட்ட அரசியல் இலட்சணமாகும்.
கிழக்கில் மாத்திரமல்ல வடக்கிலும் போருக்கு பின்னரான இலங்கையில் அதிகரித்த இராணுவ மயமாக்கல் இடம் பெறுவதும், ஏற்கனவே மாகாண சபைகளுக்கு பரவலாக்கப்பட்டுள்ள அதிகாரங்கள் மத்திய அரசினாலும், ஆளுனரினாலும் தொடர்ந்தேர்ச்சியாக பரிக்கப்படுகின்றமையும் பேருண்மையாகும்.
முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமத் அல்லது அவர் சார்ந்த கட்சி இவ்வாறான பாரதூரமான விடயங்களை வெளிச்சத்திற்கு கொண்டுவர பல்வேறு நாகரீகமான, ஜனாநாயக வழி முறைகளை எப்பொழுதுமே கையாண்டதில்லை என்பதும் குறிப்பிடத்தக்க ஒரு விடயமாகும்.
நல்லாட்சி அரசிற்கெதிரான தென்னிலங்கை தீவிரவாத சக்திகள் மாத்திரமன்றி முஸ்லிம் சமூகத்தை குறிவைத்து தமது நிகழ்ச்சி நிரல்களை நகர்த்துகின்ற இனமதவெறி சக்திகள் விவகாரத்தை பூதாகாரமாக்குவதனை கருத்தில் கொண்டு முஸ்லிம் சமூகம் பொறுப்பாகவும் நிதானமாகவும் சமயோசிதமாகவும் நடந்து கொள்ளல் வேண்டும்.
தற்பொழுது விவகாரம் ஜனாதிபதி மற்றும் பிரதமரது கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ள நிலையில் முதலமைச்சர் முஸ்லிம் என்ற குறுகிய வரையறைகளிற்கு அப்பால் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படும் எனத் தெரிய வருகின்றது.