சகா-
நாடளாவியரீதியில் ஆசிரியஆலோசகர்கள் கடந்த ஒரு மாதகாலமாக முன்னெடுத்துவரும் சட்டப்படிவேலைப் போராட்டம் நேற்றுமுன்தினம் 28ஆம் திகதியுடன் முடிவடையவிருந்தபோதிலும் கோரிக்கை இன்னும் நிறைவேற்றப்படாமையினால் போராட்டம் தொடர்ந்து நடைபெறும்.என அகில இலங்கை ஆசிரியஆலோசகர்கள் தொழிற்சங்கம் அறிவித்துள்ளது.
சங்கத்தின் கிழக்குமாகாண இணைப்பாளர் றிஸ்வான் தகவல்தருகையில்;
எமக்கான தனியான ஆசிரியஆலோசகர்சேவையை வென்றெடுக்கும்வரை தொடர்ந்து போராடுவது என எமது சங்கம் முடிவெடுத்துள்ளது. நாம்முன்னர் கடந்த 28ஆம் திகதிவரையே போராடுவது என்று குறிப்பிட்டிருந்தோம்.
எனினும் கோரிக்கை இன்னமும் நிறைவேற்றப்படாமையினால் சட்டப்படிவேலை தொடருமென எமது சங்க உறுப்பினர்கள் அனைவருக்கும் தெரிவித்துக்கொள்கின்றோம் என்றார்.
இன்று அமைச்சரவையில்...
இதேவேளை இன்று 02ஆம் திகதி புதன்கிழமை அமைச்சரவையில் ஆசிரியஆலோசகர்சேவைக்கான அமைச்சரவைப்பத்திரம் சமர்ப்பிக்கப் படவிருக்கிறது
இதற்காக சங்கத்தலைவர் எ.டி.ஆர்.அத்தபத்து தலைமையிலான குழுவினர் கடந்த வெள்ளியன்று கல்வியமைச்சின் செயலாளரைச்சந்தித்து பேச்சுவார்த்தை நடாத்தியது.
கடந்த விசேட அமைச்சரவையில் இப்பத்திரம் முன்வைக்கப்படவில்லை. எனினும் இன்று நடைபெறவிருக்கும் அமைச்சரவையில் அமைச்சர் அதனை சமர்ப்பிப்பார் என பதிலளிக்கப்பட்டது.
எனவே இன்று அமைச்சரவை முடிவின்பின்னரே போராட்டத்தின் தொடர்ச்சி பற்றி தீர்மானிக்கமுடியுமென அவர் மேலும் தெரிவித்தார்.
கிழக்கில் வெள்ளியன்று இருவேறு கூட்டங்கள்!
இதேவேளை மேற்படி அகிலஇலங்கை ஆசிரியஆலோசகர்கள் தொழிற்சங்கத்தின் உயர்மட்டநிருவாகபீடத்தினர் எதிர்வரும் 04ஆம் திகதி வெள்ளிக்கிழமை கிழக்கு மாகாணத்தில் இருவேறு இடங்களில் ஆசிரியஆலோசகர்களுக்கான கூட்டத்தை நடாத்த திட்டமிட்டுள்ளதாக சங்கத்தின் கிழக்குமாகாண இணைப்பாளர் றிஸ்வான் தெரிவித்தார்.
வெள்ளிக்கிழமை காலை 9.00 மணிக்கு கல்முனைக்கல்விமாவட்ட ஆசிரியஆலோசகர்களுக்கான கூட்டம் காரைதீவு சண்முகா மகா வித்தியாலயத்தில் நடைபெறவுள்ளது.
அக்கூட்டத்திற்கு கல்முனை சம்மாந்துறை அக்கரைப்பற்று திருக்கோவில் ஆகிய 4 வலயங்களில் கடமையாற்றும் ஆசிரியஆலோசகர்கள் கட்டாயம் அன்றையதினம் தமது சொந்த லீவைப்பதிவுசெய்துவிட்டு வரவேண்டுமெனக் கோரப்பட்டுள்ளனர்.
வெள்ளிக்கிழமை பிற்பகல் 2.00 மணிக்கு மட்டக்களப்பு மாவட்ட ஆசிரியஆலோசகர்களுக்கான கூட்டம் மட்டு.வலயக்கல்விப் பணிமனையில் நடைபெறவுள்ளது.
அக்கூட்டத்திற்கு மட்டக்களப்பு மட்டக்களப்பு மத்தி மட்டக்களப்பு மேற்கு பட்டிருப்பு கல்குடா ஆகிய 5 வலயங்களில் கடமையாற்றும் ஆசிரியஆலோசகர்கள் கட்டாயம் அன்றையதினம் தமது சொந்த லீவைப்பதிவுசெய்துவிட்டு வரவேண்டுமெனக் கோரப்பட்டுள்ளனர்.