நீண்டகாலமாக விசாரணைகளின்றி மகசின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகள் 14 பேர் தமது விடுதலையை வலியுறுத்தி இன்று ஒன்பதாவது நாளாகவும் உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். அவ்வாறான நிலையில் அவர்களின் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு வலுச்சேர்க்கும் வகையிலும் அனைத்து தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தும் வகையிலும் யாழ்ப்பாணத்தில் இன்று மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்கான வெகுஜன அமைப்பின் ஏற்பாட்டில் இன்று முற்பகல் 11.30 மணியளவில் யாழ்ப்பாண பிரதான பேருந்து நிலையத்திற்கு முன்பாக இந்தக் கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
உயிரை அடகுவைத்து உண்ணா நோன்பிருக்கும் உறவுகளின் உயிருக்கு விலைபேசாதே, நாட்டில் நல்லாட்சியா? நாம் வீதியில் கண்ணீரும், கம்பளையுமாய் நீதி தேவதையே கண்திறவாயோ?, அரசியில் கைதிகளின் விடுதலைக்கு அரசு கூறும் விலை தான் என்ன? எம் உயிர் தான் என்றால் எடுத்துக் கொள் போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை தாங்கியவாறு போராட்டத்தை முன்னெடுத்தனர்.
இதன்போது ஏழு வருடங்களாக தமிழ் அரசியல் கைதியாகத் தடுத்து வைக்கப்பட்டு நேற்று முன்தினம் கொழும்பு விசேட நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்ட யாழ். மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர் முருகையா கோமகனும் குறித்த போராட்டத்தில் கலந்து கொண்டு அரசியல் கைதிகளின் விடுதலைக்காக தனது ஆதரவை அளித்திருந்தார்.
இதேவேளை குறித்த போராட்டத்தில் சிவில் அமைப்புக்கள், அரசியல் கட்சிகள்,அரசியல் கைதிகளின் உறவினர்கள், பொதுமக்கள் உட்பட அனைத்துத் தரப்பினரையும் பங்கேற்று கைதிகளின் விடுதலைக்கு ஒன்றுபட்டு குரலெழுப்புமாறு தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்கான வெகுஜன அமைப்பு கோரியிருந்தமை குறிப்பிடத்தக்கது.