பாறுக் ஷிஹான்-
கோண்டாவிலைச் சேர்ந்த இளைஞரொருவர் சுகவீனமுற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த தனது தாயாருக்கு அடைக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்ட Nature Green நிறுவன தயாரிப்பான 19 லீற்றர் நீர் கொள்ளளவுடைய குடிநீர்ப் போத்தலை சுன்னாகம் நகரிலுள்ள மருந்தகமொன்றில் நேற்று கொள்வனவு செய்திருந்தார். இவ்வாறு கொள்வனவு செய்யப்பட்ட குடிநீர்ப் போத்தலிற்குள் இறந்த கரப்பான் பூச்சி காணப்பட்டமை அதிர்ச்சியையும், கடும் விசனத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட குடும்ப அங்கத்தவரான 33 வயதான இளைஞன் தனது முகநூலில் நேற்றுப் பதிவு செய்துள்ள நிலையில் அநாமதேய தொலைபேசி அழைப்பொன்றின் மூலமாக மேற்படி இளைஞனுக்கு அழைப்பு மேற்கொள்ளப்பட்டு இந்த விடயத்தை வெளியில் சொல்ல வேண்டாம் எனவும், இதற்காக ஐந்து இலட்சம் ரூபா பேரம் பேசப்பட்டதாகவும் நம்பகரமான தகவல்கள் தெரிவித்துள்ளன.
எனினும் குறித்த இளைஞன் அதற்கு இணங்கவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில் குறித்த அநாமதேய தொலைபேசி இலக்கத்துக்குத் தான் மீண்டும் அழைப்பை மேற்கொண்ட போதும் அழைப்பை ஏற்படுத்த முடியவில்லை எனத் தெரிவித்த இளைஞன் தொலைபேசி இலக்கத்தைத் தருமாறு கேட்டதற்கு மறுப்புத் தெரிவித்து விட்டமையும் குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, தொலைபேசி அழைப்பை மேற்கொண்டவர்கள் தாம் யாரென்பதை இனங்காட்டாத போதும் குறித்த குடிநீர்த் தயாரிப்பு நிறுவனத்தைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம் எனச் சந்தேகம் தெரிவிக்கப்படுகிறது.

