உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் ஜிகா வைரஸ் எச்சில் மூலமாகவும் பரவலாம் என்பதால், முத்தமிடுவதை தவிர்க்க வேண்டும் என்று பிரேசில் அரசு எச்சரித்து உள்ளது.
ஆப்பிரிக்காவின் உகண்டாவில் உருவாகி, அமெரிக்கா, ஐரோப்பா, ஆசிய நாடுகள் என உலகம் முழுதும் பரவி வருகின்றது.
டெங்கு, சிக்கன்குன்யாவை பரப்பும் ’ஏடிஸ்’(Aedes) என்ற கொசுக்களால்தான் இந்த ஜிகா வைரஸ் நோயும் பரப்பப்படுகிறது.
ஜிகா காடுகளில் வாழும் குரங்குகளிடமிருந்து இந்த வைரஸ் மனிதர்களுக்கு பரவியது 1947 ம் ஆண்டிலே கண்டுபிடிக்கப்பட்டது. அதுவே பெயர் காரணமானது. இந்த வைரஸால் பாதிக்கப்பட்ட கொசுக்கள் கடித்தால் யாருக்கும் வரலாம்.
தாயின் கருவில் வளரும் குழந்தைகளின் மூளை வளர்ச்சியை இந்த நோய் பாதிக்கிறது. இதனால், ஜிகா நோய் பாதிப்புடன் பிறக்கும் குழந்தைகள் சிறிய தலைகளுடன் காணப்படுகின்றன.
இந்நோயானது, ‘ஏடிஸ்’ கொசுக்களால் பரவுவதாக முதலில் தெரிவிக்கப்பட்டது. அதன்பின், உறவு மூலமாகவும் ஜிகா நோய் பரவுவதாகவும் சமீபத்தில் கண்டறியப்பட்டு உள்ளது.
இந்நோயை குணப்படுத்தும் மருந்துகளோ, தடுப்பு மருந்துகளோ இதுவரை கண்டுபிடிக்கப்படாத நிலையில், ஆசியா கண்டத்துக்கும் இந்நோய் வேகமாக பரவ தொடங்கியுள்ளது.
சுமார் 40 லட்சம் மக்களை இந்நோய் தாக்கக்கூடும் என மதிப்பிட்டுள்ள உலக சுகாதார நிறுவனம், கொசுக்கள் எங்கெல்லாம் உள்ளதோ, அங்கெல்லாம் ஜிகா நோய் செல்லக்கூடும் என எச்சரித்துள்ளது.
இந்நிலையில், ஜிகா நோய்த் தொற்று உள்ளவர்களின் எச்சில் மற்றும் சிறுநீரகம் மூலமாகவும் இந்நோய் மற்றவர்களுக்கு வேகமாக பரவக்கூடும் என்று நேற்று தெரியவந்துள்ளது.
இதையடுத்து, வெளிநபர்களை முத்தமிடுவதை கர்ப்பிணிப் பெண்கள் தவிர்க்க வேண்டும் என்று பிரேசில் அரசின் சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.