மஹிந்த ராஜபக்ஸவின் செயற்பாடுகள் தொடர்பில் என்னிடம் அழுது புலம்பி விமர்சனங்களைத் தொடுத்தவர்களே இன்று அவர் பின்னால் வலம் வருகின்றனர்.
புதிய கட்சி ஆரம்பித்தால் ஆரம்பிக்கட்டும். எனது வேலையை நான் காட்டுகின்றேன். அவர்கள் பாற்சோறு சமைத்த பிறகு நான் காரமான கட்டசம்பலை தயாரித்து வழங்குவேன். என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சீறிப் பாய்ந்துள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் நேற்று நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் மஹிந்த தரப்பினர் ஆரம்பிக்கவுள்ள புதிய கட்சி பற்றியும் கலந்துரையாடப்பட்டுள்ளது. இதன்போதே கடும் சீற்றத்துடன் ஜனாதிபதி மேற்படி கருத்தை முன்வைத்துள்ளார்.
ஜனாதிபதியின் இந்தக் கருத்துக்குப் பாராட்டுத் தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, புதிய கட்சி உதயமானால் சுதந்திர கட்சியின் பதிலடி கடுமையாக இருக்கவேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம கடும் ஆட்சேபனையை வெளியிட்டார். "தேசிய அரசுடன் இணைந்து செயற்பட முடியாது. இதற்கு மக்கள் ஆணை வழங்கவில்லை. எனவே, சுயாதீனமாக செயற்படுவதற்கு சுதந்திரமளிக்கப்படவேண்டும்'' என்ற தர்க்கத்தை முன் வைத்தார்.
"அவ்வாறு இல்லை. தேசிய அரசில் இணைந்து செயற்படுவதற்கு சுதந்திர கட்சி மத்தியசெயற்குழு ஒப்புதல் வழங்கியுள்ளதுதானே'' என்று வெல்கமவுக்கு பதிலடி கொடுத்தார் ரெஜினோல்ட் குரே.