முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் ஆட்சிகாலத்தில் ஆரம்பிக்கப்பட்ட 250 பில்லியன் டொலர்கள் பெறுமதியான வேலைத்திட்டங்கள் தொடர்பிலான கணக்கீடுகளை மேற்கொள்ள சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் ஸ்ரீலங்காவிற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளனர்.
சர்வதேச நாணய நிதியத்தின் சட்ட ஆய்வு மற்றும் கணக்கீட்டு அதிகாரிகள் கொண்ட விசேட குழு அடுத்த வாரமளவில் ஸ்ரீலங்காவிற்கான விஜயத்தை மேற்கொள்ளவிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த 2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலிற்கு முன்னதாக இந்த 250 பில்லியன் டொலர்கள் பெறுமதியான வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
எனினும் இதற்கான அனுமதி திறைசேரியிடம் இருந்தும் உரிய கட்டமைப்பிலிருந்தும் பெறப்படவில்லை என்ற குற்றச்சாட்டு காணப்படுகின்றது.
இந்த நிலையில் ஸ்ரீலங்காவிற்கு விஜயம் செய்யும் சர்வதேச நாணய நிதியப் பிரதிநிதிகள் இது குறித்து ஆராயப்படவிருப்பதோடு, ஆய்வுகளின் முடிவில் அரசாங்கத்திற்கும் அறிக்கை சமர்ப்பிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதேவேளை மஹிந்த ராஜபக்ச அரசாங்கத்தின் ஆட்சியின் கீழ் இடம்பெற்ற நிதிமோசடிகள் தொடர்பிலான விசாரணைகளுக்கு உதவி வழங்க அமெரிக்கா மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் முன்வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
