நிஸ்மி-
இலங்கையில் முதன் முதலாக வீடு வீடாகச் சென்று திண்மக் கழிவகற்றல் நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்தியது அக்கரைப்பற்றுப் பிரதேசத்தில்தான் என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.தவம் தெரிவித்தார்
அக்கரைப்பற்று மாநகரை அழகு படுத்தும் வேலைத்திட்டத்தின் கீழ் சுகாதார மேம்பாட்டினை ஏற்படுத்தும் செயற்றிட்;டத்தின் ஆரம்ப நிகழ்வு கடந்த (31) வியாழக்கிழமை அக்கரைப்பற்று மாநகர ஆணையாளர் ஏ.எல்.எம்.அஸ்மி தலைமையில் மாநகர கேட்போர் கூடத்தில் இடம் பெற்றபோது அதில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மாகாண சபை உறுப்பினர் தொடர்ந்து உரையாற்றுகையில்: அக்கரைப்பற்று மாநகரசபை பிரதேச சபையாக இருந்த காலத்தில் அதன் தவிசாளராக நான் இருந்தபோது என்னால் ஆரம்பித்து வைக்கப்பட்ட வீடு வீடாகச் சென்று திண்மக் கழிவகற்றல் நடவடிக்கைள் தொடர்ச்சியாக இடம் பெற்று வருவது பாராட்டத்தக்கது. இது தனியே மாநகர சபையினால் மாத்திரம் செயல்படுத்த முடியாது. இதனை பொது மக்கள், அரச மற்றும் தொண்டு நிறுவனங்களின் பூரண ஆதரவுடனேயே நிறைவேற்ற முடியும். எனவே எல்லோரும் சேர்ந்து நகரத்தை அழகுபடுத்த ஒத்துழைப்பு வழங்க முன்வரவேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.
நிகழ்வின்போது முறையான திண்மக் கழிவகற்றல் நடவடிக்கைகளுக்கு அக்கரைப்பற்று நகரின் பிரதான வீதியில் அமைந்துள்ள 22 ஹேட்டல் உரிமையாளர்களுக்கு திண்மக் கழிவகற்றல் தொட்டிகள் இலவசமாக வழங்கி வைக்கப்பட்டதோடு, அக்கரைப்பற்று மாநகர சபை பிரதேசத்திலுள்ள 25 கலாசார நிலையங்களில் கல்வி கற்கும் மாணவர்கள் சுத்தமான குடி நீரைப் பெற்றுக் கொள்வதற்காக குடி நீர் சுத்திகரிப்பு உபகரணங்களும் இலவசமாக வழங்கி வைக்கப்பட்டன.
இந்நிகழ்வில் மாநகர சபையின் கால் நடை வைத்திய அதிகாரி டாக்டர் திருமதி ஹம்தூண், வீதி அபிவிருத்தி அதிகார சபை நிறைவேற்றுப் பொறியியலாளர் கே.எம்.இஸ்மாயில், பிரக்டிகல் அக்ஷன் தொண்டு நிறுவனத்தின் பணிப்பாளர் பிரசாத் இரட்நாயக்க, அக்கரைப்பற்றுப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஏ.எல்.எம்.ஜெமீல், பீட் ஸ்ரீலங்கா தொண்டு நிறுவனப் பிரதிநிதி உட்பட அரச மற்றும் தனியார் வங்கிகளின் பிரதிநிதிகள், பொது சுகாதாரப் பரிசோதகர்கள், மாநகர அலுவலக உத்தியோகத்தர்கள், ஹோட்டல் உரிமையாளர்கள்ஈ கலாசார நிலையங்களின் பொறுப்பதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் என ஏராளானோர் கலந்து கொண்டனர்.




