எப்.முபாரக்-
யுத்த காலத்திலும் சரி, யுத்தம் நிறைவடைந்து சமாதான ஏற்பட்ட பின்னரும் சரி எங்களுக்கு உதவும் ஒரேயொரு அமைச்சர் ரிஷாட் பதியுதீன் மட்டுமே ஆவார் என ஸ்ரீ பன்வௌ விகாரதிபதி நிலக லங்கார தேரர் தெரிவித்தார்.
ஸ்ரீ பன்வௌ பகுதியில் இடம்பெற்ற கூட்டமொன்றில் உரையாற்றியபோதே தேரர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கூறியதாவது,
அமைச்சர் ரிஷாட் பதியுதீன் சிங்களம், தமிழ், முஸ்லிம் பேதமின்றி எல்லோருக்கும் உதவி வருபவர். அவரும் வெலி ஓயா மக்களைப் போன்று யுத்த காலத்தில் அகதியானவர்.
வெலி ஓயா மக்கள் பல்வேறு கஷ்டங்களையும் இன்னல்களையும் அனுபவித்தவர்கள். இப்போதும் அதன் விளைவுகளை அனுபவிப்பவர்கள்.
புலிகளின் அச்சுறுத்தலுக்குப் பயந்து பல்வேறு இடங்களில் தஞ்சம் புகுந்து வாழ்ந்தோம். எந்த நேரத்தில் எமக்கு ஆபத்துகளுக்கு ஓடோடி வந்து உதவியவர் அமைச்சர் ரிஷாட்.
தேர்தல் காலங்களில் இங்கு வந்து பணத்தையும், பொருட்களையும் தந்து வாக்குக் கேட்டவர்கள் இன்று இந்தப் பக்கம் வருவதில்லை.அவர்களை நாம் காணவும் இல்லை.
தேர்தல் முடிந்து வெற்றி பெற்ற அமைச்சர் ரிஷாட் பதியுதீன் இங்கு வந்து மக்களைச் சந்தித்து அவர்களின் குறை நிறைகளை கேட்டறிவதுடன் நன்றியையும் தெரிவிக்கின்றார். இதுதான் மக்கள் சேவகனின் பண்பாகும்.
அமைச்சர் றிஷாட் பதியுதீன் என்றுமே பொய் சொல்பவர் அல்ல. அன்று இடம்பெற்ற ஹிரு தொலைக்காட்சி விவாதத்தில் எமது பௌத்த தேரர் துறவியுடன் உரையாடும் போது அவர் மிகவும் கண்ணியமாகவும் விழித்துப் பேசி தனது நியாயங்களை நிருபித்தார்.சிங்கள மக்களின் மனதைக் கவர்ந்தார்.
அது மட்டுமன்றி எங்களைப் போன்ற பௌத்த மத குருமார்களுக்கும் வில்பத்தைப் பற்றி தவறாக எண்ணி இருந்த எமது சிங்கள மக்களுக்கும் உண்மையை வெளிப்படுத்தினார்.
அமைச்சர் கடந்த 15 ஆண்டு காலமாக அரசியல் செய்பவர். அவருடைய அரசியல் பயணத்திலும் மக்கள் பணியிலும் நான் பங்கேற்று இருக்கிறேன்.
சிங்கள அமைச்சர்கள் பலர் இருந்து போதும் இந்தப் பிரதேசத்துக்கு வந்து எமக்குதவுவதில்லை. எமக்கு உதவும் அமைச்சர் ரிஷாட் பதியுதீனை நாங்கள் என்றுமே மறக்கமாட்டோம் என்றார்.
