கிழக்கு மாகாணத்தில் இயங்கி வரும் அரசாங்க மற்றும் தனியார் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பயிற்சி நிலையங்களை தொடர்ந்தும் இந்த மாவட்டங்களில் இயங்க வைப்பதற்கான அவசர நடவடிக்கையினை மேற்கொள்ளுமாறு கிழக்கு மாகாண சபையினை கோரும் தனிநபர் பிரேரனையை கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ்.உதுமாலெப்பை அவர்களினால் எதிர்வரும் 26 ஆம் திகதி நடைபெறவுள்ள கிழக்கு மாகாண சபை அமர்வில் சமர்ப்பிப்பு.
கிழக்கு மாகாணத்திலுள்ள மூன்று மாவட்டங்களிலும் இயங்கி வரும் அரசாங்க மற்றும் தனியார் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பயிற்சி நிலையங்களை தொடர்ந்தும் இந்த மாவட்டங்களில் இயங்க வைப்பதற்கான நடவடிக்கையினை மேற்கொள்ளுமாறு கிழக்கு மாகாண சபையினை கோரும் தனிநபர் பிரேரனையை கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ்.உதுமாலெப்பை அவர்களினால் கிழக்கு மாகாண சபையில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இது பற்றி மேலும் தெரிவிக்கப்படுவதாவது....
இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தின் ஒரு மாவட்டத்திற்கு ஒரு பயிற்சி நிலையம் என்ற அடிப்படையில் கிழக்கு மாகாணத்தில் அம்பாறை, கல்முனை, மட்டக்களப்பு, திருகோணமலை நகரங்களில் 04 அரசாங்க பயிற்சி நிலையங்களும், சில தனியார் பயிற்சி நிலையங்களும் இதுவரை இயங்கி வருகின்றன. இப்பயிற்சி நிலையங்கள் அமைக்கப்பட்டதனால் கிழக்கு மாகாணத்தில் இருந்து வெளிநாடுகளுக்கு தொழிலுக்காக சென்று அன்னிய செலாவனியை ஈட்டித் தருகின்றவர்களுக்கான 'ரட்ட விருவோ' எனும் பெயரை வழங்கி வெளிநாட்டில் உள்ளவர்களுக்கு இவ்வலுவலகங்கள் ஊடாக பல்வேறு சேவைகள் வழங்கப்பட்டன.
இந்த நிலையில் திடீர் என இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தின் தவிசாளரினால் அனுப்பப்பட்டுள்ள 01/2016ம் இலக்க சுற்று நிருபத்தில் 20/01/2016ம் திகதியில் இருந்து கிழக்கு மாகாணத்தில் உள்ள அனைத்து பயிற்சி நிலையங்களையும் மூடி விட்டு இனிமேல், கிழக்கு மாகாணத்தில் இருந்து வெளிநாடுகளுக்கு வேலை வாய்ப்புக்கள் பெற்றுச் செல்பவர்களுக்கான பயிற்சிகளை தங்கல்ல, மத்துகம, கண்டி, பணிப்பிட்டி, இரத்தினபுரி, மீகொட போன்ற பிரதேசங்களில் அமைந்துள்ள பயிற்சி நிலையங்களில் பயிற்சிகள் நடை பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது,
கிழக்கு மாகாணத்தின் அம்பாறை, கல்முனை, திருகோணமலை, மட்;டக்களப்பு நகரங்களில் இதுவரை இயங்கி வந்த பயிற்சி நிலையங்கள் அனைத்தும் மூடப்படவுள்ளதால் டிகிழக்கு மாகாண மக்கள் பல சிரமங்களை அனுபவிக்க வேண்டியுள்ளது.
எனவே, திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை, கல்முனை நகரங்களில் இதுவரையும் இயங்கி வந்த அரசாங்க பயிற்சி நிலையங்களையும், தனியார் பயிற்சி நிலையங்களையும் தொடர்ந்தும் இப்பிரதேசங்களில் இயங்க வைப்பதற்கான அவசர நடவடிக்கைகளை கிழக்கு மாகாண சபை மேற்கொள்ள வேண்டும் என்ற தனிநபர் பிரேரனையை எதிர்வரும் 26.01.2016ம் திகதி நடைபெறவுள்ள கிழக்கு மாகாண சபை அமர்வின் போது கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ்.உதுமாலெப்பை அவர்களினால் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
