முஹம்மட் வஹாப், சஜித்-
ஒரு தனிநபரை திருப்திப்படுத்துவதற்காக கட்சியின் தேசிய கொள்கைபரப்புச் செயலாளர் சுபையிரை கட்சியைவிட்டு ஓரங்கட்டியமையானது அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சிக்கு பாரிய இழப்பாகும் என அக்கட்சியின் செயலாளர் நாயகம் வை.எல்.எஸ் ஹமீட் தெரிவித்தார்.
அண்மையில் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கன்டவாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்;
கிழக்கு மாகாணம் மட்டுமல்லாது தேசிய ரீதியாகவும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சிக்காக தன்னை முழுமையாக அர்ப்பணித்து செயற்பட்டவராகவிருந்தால் அது கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சுபையிராகத்தான் இருக்கும் அக்கட்சியின் வளர்ச்சிக்காக தலைமையோடும் என்னோடும் விசுவாசமாகவிருந்து அவருக்கு கட்சி வழங்கிய பதவியினைக் கொண்டு திரம்படச் செயற்பட்டதுடன் அவரது சொந்தப் பொருளாதாரத்தினையும் கட்சிக்காக செலவு செய்தமையினையும் எவராலும் மறந்துவிட முடியாது. அதற்காவே அவருக்கு கிழக்கின் மின்னல் எனும் பட்டமும் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
அப்படியான ஒருவர் எதுவித தவறுகளையும் செய்யாத சந்தர்ப்பத்தில் மடடக்களப்பு மாவட்டத்தில் தனிநபர் ஒருவரை திருப்திப்படுத்துவதற்காகவும், அம்மாவட்டத்தில் ஒருவருக்கு மாத்திரம் களம் அமைத்துக் கொடுப்பதற்காகவும் கட்சியின் தலைமை துணைபோய் கட்சியின் தேசிய கொள்கைபரப்புச் செலாளர் கட்சியிலிருந்து ஓரங்கட்டப்பட்டமை கவலையான விடயமாகும்.
கட்சியினுடைய தேசிய கொள்கைபரப்புச் செயலாளர் மட்டுமல்லாது கிழக்கு மாகாண அமைச்சராகவிருந்து அNதுபோன்று கிழக்கு மாகாண சபைக்கு இருமுறை மக்களினால் தெரிவு செய்யப்பட்ட துணிவுள்ள ஒரு அரசியல் வாதியின் வெளியேற்றம் கூட தலைமையினால் கடுகளவேனும் கவனத்திற்கொள்ளப்படவில்லை எனவே இவ்வாறான சந்தர்ப்பங்களில் தலைமைகள் அவதானத்துடன் செயற்பட வேண்டும்.
மறைந்த தலைவர் மர்ஹூம் எம்.எச்.எம் அஸ்ரப் அவர்கள் ஆரம்பித்த சிறி லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி அவரின் மறைவிற்குப் பின்னர் வழிதவறிச் சென்றபோது அந்தக் கட்சியை விட்டு விலகி 2005ஆம் ஆண்டு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியை அமைத்தோம். ஆனால் கட்சியின் பெயர் மாறினாலும் தலைவருடைய கட்சியாவே நான் இதனைப் பார்த்துவந்தேன். தற்போது இக்கட்சிக்குள்ளும் பல குழப்பங்கள் இருப்பது வேறுவிடயம். பல சிறமங்களுக்கு மத்தியில் இந்தக்கட்சியை அமைத்து இக்கட்சி இன்று இந்தளவிற்கு விருட்சமாவதற்கு காரணமாகவிருந்தவன் நானே
அதற்காக கட்சி தலைமை எனக்கு தேசியப்பட்டியல் வழங்குவதாக கடந்த காலங்களில் வழங்கிய வாக்குறுதிகள் மீறப்பட்டதனை இந்த நாடே அறியும் இந்த விடயத்திலே தலைமைக்கும் எனக்குமிடையே விரிசல் ஏற்பட்டது. அதன் பின்னர் கட்சியை ஸ்தாபித்த கட்சியின் செயலாளரையும் ஓரங்கட்டிவிட பிரயத்தனங்கள் முன்னெடுக்கப்பட்டது அதுவும் இறுதியில் முடியாமல் போய்விட்டது எனவே தற்போதும் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் செயலாளராக நானே செயற்பட்டு வருகின்றேன் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
