பொது பல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் கைது செய்யப்படுவதைத் தடுக்கும் வகையில் ராஜகிரிய விகாரையில் தற்போது ஏராளமான சிங்களவர்கள் அணிதிரண்டுள்ளனர்.
ஹோமாகம நீதிவான் நீதிமன்றத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கடத்தல் தொடர்பான வழக்கின் போது ஞானசார தேரர் நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் நடந்து கொண்டிருந்தார்.
பிரகீத்தின் மனைவி சந்தியா எக்னெலிகொடவை சிங்களப் புலி என்று கடுமையான வார்த்தைகளால் திட்டிய அவர், நீதிமன்ற அவமதிப்பு குறித்து எச்சரிக்கை செய்த நீதவானிடம் முடிந்தால் தன்னை கைது செய்யுமாறு நேருக்கு நேர் சவால் விட்டிருந்தார். அதன் பின் ஞானசார தேரர் நீதிமன்றத்தை விட்டும் வெளியேறியிருந்தார். அதுவரை நீதிபதி அவருக்கு எதிராக எந்தவிதமான உத்தரவுகளையும் பிறப்பிக்கவில்லை.
எனினும் ஞானசார தேரரின் நீதிமன்றத்திற்குள்ளான அடாவடி குறித்து சட்டத்தரணிகள் நீதிமன்ற அமர்வின்போது கடும் ஆட்சேபம் வெளியிட்டனர். இதனையடுத்தே ஞானசார தேரருக்கு எதிரான பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே ஞானசார தேரர் கைது செய்யப்படுவதைத் தடுக்கும் வகையில் அவர் வசிக்கும் ராஜகிரிய விகாரையில் சிங்களவர்கள் அணிதிரளுமாறு பொதுபல சேனா அமைப்பு பேஸ்புக் மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இந்த வேண்டுகோளை ஏற்று தற்போது ஏராளமான சிங்கள மக்கள் ராஜகிரிய விகாரையில் ஒன்று திரண்டுள்ளனர். இதன் காரணமாக அப்பகுதியை அண்மித்து வாழும் சிறுபான்மை மக்கள் மத்தியில் அச்சம் கலந்த பதட்டமொன்று பரவியுள்ளது.
