சலீம் றமீஸ்-
இலங்கை புனர்வாழ்வு, புனரமைப்பு அதிகார சபையின் தலைவராகவும், உள்ளுராட்சி மாகாண அமைச்சின் உள்ளுராட்சி ஆளுகை நிறுவனத்தின் தவிசாளராகவும், கல்முனை பிரதேச சபையின்; முதலாவது தவிசாளராகவும், தேசிய காங்கிரஸின் பிரதி தலைவராகவும் கடமை புரிந்த பொறியியலாளர் ஐ.ஏ.ஹமீட் அவர்களின் இழப்பு நமது மக்களுக்கு பேரிழப்பாகும் என முன்னாள் கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சரும், தேசிய காங்கிரஸின் தேசிய அமைப்பாளரும், கிழக்கு மாகாண சபையின் உறுப்பினருமான எம்.எஸ்.உதுமாலெப்பை விடுத்துள்ள அனுதாபச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
பெரும் தலைவர் எம்.எச்.எம்.அஷ்ரப் அவர்களோடு கைகோர்த்து அவரது சிந்தனைகளுக்கு வலுவூட்டி, சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சிக்கு உரம் ஊட்டியவர். பெரும் தலைவர் எம்.எச்.எம்.அஷ்ரப் அவர்களோடு தலைமைத்துவ விசுவாசத்தோடு செயற்பட்டு தனது கல்முனை பிரதேச சபையின் தவிசாளர்; பதவியை விட்டுக் கொடுத்து முன்மாதிரியாக செயற்பட்ட சிறப்பு இவருக்கு உண்டு.
பெருந் தலைவர் எம்.எச்.எம்.அஷ்ரப் அவர்களின் மரணத்திற்கு பின் தேசிய காங்கிரஸின்
தலைவர், முன்னாள் அமைச்சர் ஏ.எல்.எம்.அதாஉல்லாஹ் அவர்களோடு கைகோர்த்து தேசிய காங்கிரஸின் வளர்ச்சிக்காக உரம் ஊட்டி இறுதிவரை தலைமைத்துவ விசுவாசத்துடன் செயற்பட்ட கௌரவமான ஒரு அரசியல் தலைவராகும்.
தமிழ், முஸ்லிம் சமூகங்களுக்கு மத்தியில் நல்லுறவை வளர்ப்பதிலும், காப்பதிலும் அவர் செய்த சமூகப் பணிகள் எடுத்தாளத்தக்கது.
எதிரான அரசியல் கொள்கையுடையோர்களும் ஏற்றுக் கொள்ளும் பழக்க வழக்கங்கள், பண்பாடு, பரஸ்பரம், உதவும் கரம் கொண்ட ஹமீட் அவர்களை இழந்து தவிக்கும் மருதமுனை மக்களுக்கும் , அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவிப்பதுடன், இவரது சுவன ஈடேற்றத்துக்கு எல்லாம் வல்ல அல்லாஹ்வை பிரார்த்திக்கின்றோம் எனக் குறிப்பிட்;டார்.
