பயங்கரவாத தாக்குதல்களை பொதுமக்கள் மற்றும் பாதுகாப்பு படைகள் மீது மேற்கொள்வதற்கு சதித்திட்டம் தீட்டியமை மற்றும் அவற்றை செயற்படுத்தியமை ஆகிய குற்றச் சாட்டுக்களின் கீழ் கைது செய்யப்பட்ட 47 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாக சஊதி அரேபிய உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
அமைச்சின் உத்தியோகபூர்வ செய்தி முகவரகத்தின் அறிக்கையின் படி, குறித்த 47 பேரும் பயங்கரவாத சிந்தனைகளை பரப்பியமை, பயங்கரவாத இயக்கங்களில் சேர்ந்து செயற்பட்டமை மற்றும் பல்வேறு குற்றச் செயல்களைப் புரிந்தமை ஆகிய குற்றச்சாட்டுக்களின் கீழ் தண்டனை வழங்கப்பட்டதாக தெரிவித்துள்ளது.
தண்டனை நிறைவேற்றப்பட்ட இவர்களில் அனேகமானோர் அல்-காயிதா அமைப்பின் உறுப்பினர்களாவர். இவர்கள் 2003 – 2006 காலப்பகுதியில் தாக்குதல்களை மேற்கொண்டிந்தனர், அதனால் சஊதி பிரஜைகள் மற்றும் வெளிநாட்டினரும் சஊதி அரேபியாவில் கொல்லப்பட்டிருந்ததாக அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மரணதண்டனை நிறைவேற்றப்பட்ட 47 பேரில் 45 பேர் சஊதி பிரஜைகள். ஏனைய 2 பேர் சாட் மற்றும் எகிப்து நாடுகளைச் சேர்ந்தோராகும். என உள்துறை அமைச்சின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அல்-காயிதா சிந்தனையாளர் பாரிஸ் அல்-சுவாலி மற்றும் ஷீஆ மத போதகர் நிம்ர் அல்-நிம்ர் ஆகியோரும் இதில் உள்ளடக்கம் என அமைச்சு தெரிவித்துள்ளது.




