ஜலீல் ஜீ,காரைதீவு நிருபர்-
கல்வி அமைச்சின் விஷேட சுற்றுநிருபத்துக்கமைய தேசிய மீலாதுன் நபி விழாவை முன்னிட்டு சம்மாந்துறை தாருஸ்ஸலாம் மகா வித்தியாலயத்தில் திங்கட்கிழமை மீலாதுன் நபி விழா கொண்டாடப்பட்டது.
'எங்கள் உயிரிலும் மேலான முகம்மது நபி (ஸல்) அவர்கள் மீது அன்பு செலுத்துதல்' எனும் தொனிப்பொருளில் விழா ஒழுங்கு செய்யப்பட்டது. விழாக்குழுவின் தலைவரான அல்ஹாஜ் ஏ.எல்.மஜீட் மௌலவி தலைமையில் இந் நிகழ்வு நடைபெற்றது.
பிரதம அதிதியாகசர்வதேச இஸ்லாமிய மார்க்க சொற்பொழிவாளர் அல்ஹாபிழ் அலி அஹமட் றஸாதி கலந்து சிறப்பித்தார்கள்.
பிரதம அதிதியின் உரையில் தற்காலத்தில் றஸுலுல்லாஹ்வின் மீது அன்பு செலுத்துவதன் முக்கியத்துவம் பற்றியும், சிறுபிராயத்திலிருந்தே குழந்தை வளர்ப்பில் றஸுலுல்லாஹ் பற்றிய ஸுன்னாக்களை ஊட்டுவதன் அவசியம் பற்றியும், வாழ்வில் அனைவரும் அதனை நடைமுறைப்படுத்துவது பற்றியும் உபதேசிக்கப்பட்டது.
சஹாபாக்கள் றஸுலுல்லாஹ் மீதுசெலுத்திய அன்பினையும், அக்காலத்தில் வாழ்ந்த ஒரு சிறுமி றஸுலுல்லாஹ் மீது செலுத்திய அன்பின் மகிமைபற்றியும் உள்ளத்தைத் தொடும் வண்ணம் கண்களில் கண்ணீர் மல்க சொற்பொழிவாற்றப்பட்டது.
வழமை போன்ற சொற்பொழிவாக மட்டுமல்லாமல் மாணவர்கள் மத்தியில் வினா எழுப்பி றஸுலுல்லாஹ்வின் மீது அல்லாஹுத்தஆலா காட்டுகின்ற அன்பினையும் றஸுலுல்லாஹ்வுக்குப் பரிசாக 'வஸீலா' எனும் சுவர்க்கம் கிடைக்க நாங்கள் அன்றாடம் அதான் முடிந்த பிறகு ஓதுகின்ற துஆப் பிரார்த்தனையின் முக்கியத்துவம் பற்றியும் தனது சொற்பொழிவில் குறிப்பிட்டார்.
அத்துடன் கல்கௌசர் எனும் நீர்த்தடாகத்தில் நீர் அருந்தும் பாக்கியத்தை பெறுவதன் அவசியத்தைப் பற்றியும், மரணத்தின் பிறகு மலக்குகள் கப்றறையில் றஸுலுல்லாஹ் பற்றி நம் அனைவரிடமும் விசாரிப்பார்கள். அதற்கு நாம் பதில் கூறுவதாக இருந்தால், வாழும் காலத்தில் றஸுலுல்லாஹ் மீது உண்மையான அன்பு செலுத்துதல் வேண்டும்- றஸுலுல்லாஹ் மீது ஸலவாத் சொல்ல வேண்டும்- ஸுன்னாக்களை எடுத்து நடத்தல் வேண்டும்- ஒவ்வொரு முஸ்லிம் மீதும் கட்டாயக் கடமையாகும். எனவும் சொற்பொழிவில் குறிப்பிட்டார்.
இறுதியாக பிரதம அதிதிக்கு பாடசாலை சமூகத்தின் சார்பில் முதல்வர் அல்ஹாஜ் ஏ.சி.ஏ.எம்.இஸ்மாயில் நன்றி தெரிவித்தார். தொடர்ந்து மாணவர்களது இஸ்லாமிய கலைநிகழ்ச்சிகள் இடம்பெற்றன. மாணவி எம்.ஐ.யும்னா அவர்கள் இஸ்லாத்தில் குற்றங்களும் தண்டனைகளும் எனும் தலைப்பில் பேச்சு இடம்பெற்றது. அனைத்து நிகழ்ச்சிகளும் உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் வண்ணம் அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும். அல்ஹாஜ் ஹாறுன் மௌலவி அவர்களால் நன்றி உரை நிகழ்த்தப்பட்டது.


