உள்ளுராட்சி மன்றங்களிலிருந்த முஸ்லிம் பிரதிநிதித்துவங்கள் பாதிக்கப்படக்கூடாது மு.காவின் தேசிய பிரதி ஒருங்கிணைப்புச் செயலாளர் ரஹுமத் மன்சூர் வேண்டுகோள் !
எல்லை மீள்நிர்ணயம், புதிய தேர்தல் முறை ஆகியவை அமுல்படுத்தப்படும்போது உள்ளுராட்சி மன்றங்களில் இதுவரை காலமும் காணப்பட்ட முஸ்லிம் பிரதிநிதித்துவங்களில் பாதிப்புக்கள் ஏற்படாமை உறுதி செய்யப்படவேண்டுமென ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய பிரதி ஒருங்கிணைப்புச் செயலாளரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உச்சபீட உறுப்பினருமான ரஹுமத் மன்சூர் தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் 2012ஆம் ஆண்டின் 22ஆம் இலக்க உள்ளூர் அதிகார சபைகள் தேர்தல்கள் திருத்தச் சட்டத்தின் படி வட்டார முறையும் விகிதாசார முறையும் கலந்ததாக நடைபெறவுள்ளதாகவும் அரசியல் கட்சிகள் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கான ஏற்பாடுகளை ஆரம்பிக்கப்பட்டுள்ளதோடு எல்லை நிர்ணயங்கள் தொடர்பான முறைப்பாடுகள் தற்போது அமைச்சரினால் நியமிக்கப்பட்டுள்ள ஐவர் கொண்ட குழுவினால் ஆராயப்பட்டு வருகின்றன.
இவ்வாறான நிலையில் இந்த நாட்டின் தேசிய இனங்களில் ஒன்றான முஸ்லிம் சமுகத்தின் உள்ளுராட்சி மன்ற பிரதிநிதித்துவங்கள் பாதிப்படையாத வகையில் மறுசீரமைப்புக்கள் அமைய வேண்டும்.
குறிப்பாக வடக்கு கிழக்கு மாகாணத்திலிருந்து இடம்பெயர்ந்த முஸ்லிம்கள் தற்போது வரையில் முழுமையாக மீளக்குடியேற்றம் செய்யப்படாத நிலைமையில் உள்ளார்கள். வடக்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் 25வருடங்கள் கடந்துள்ள நிலையில் தற்போதும் காணல் நீராகவுள்ளது.
அதேபோன்று திருகோணமலையில் தோப்பூர், குச்சவெளி, கிண்ணியா, புல்மோட்டை, அரிசிமலை ஆகிய பிரதேசங்களில் முஸ்லிம்களின் குடியேற்றம் நிறைவு செய்யப்படவில்லை. அம்பாறையில் இராணுவத்தினர் கையகப்படுத்திய காணிகள் பல மீளக் கையளிக்கப்படாதிருக்கின்றன.
மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் முஸ்லிம் எல்லை நிர்ணயம் தொடர்பில் சில பிரச்சினைகள் காணப்படுகின்றன. அவற்றுக்கும் இரு சமுகத்தினரும் பாதிப்படையாது தீர்வு எட்டப்படவேண்டும்.
கிழக்கு மாகாணத்திற்கு வெளியில் முஸ்லிம் சமுகத்தில் மூன்றிரண்டு சமுகத்தினர் பரந்து வாழ்ந்து வருகின்றனர். ஆகவே அவர்களின் எதிர்கால பாதுகாப்பு, அபிவிருத்தி உள்ளிட்ட விடயங்களை கருத்திற் கொண்டு பிரதிநிதித்துவங்களை உறுதி செய்யவேண்டியது மிக முக்கியமானதாகும்.
குறிப்பாக வட்டார மற்றும் விகிதாரசார முறையில் நடைபெறவுள்ளதாக கூறப்படுகின்றது. இந்நிலையில் முஸ்லிம்களின் தேசிய அரசியல் கட்சியான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸும் அதன் தலைவருமான ரவூப் ஹக்கீம் அரசாங்கத்துடன் உரிய அணுகுமுறைகள் மேற்கொண்டு எமது சமுகத்தின் பிரதிநிதித்துவங்களை உறுதி செய்ய வேண்டும் எனக்கோருநிற்கின்றேன் என்றார்.
