இக்பால் அலி-
பறகஹதெனிய ஜமாஅத் அன்சாரிஸ் சுன்னத்தில் முஹம்மதிய்யாவின் ஏற்பாட்டில் முசலி பிரதேச செயலாளர் பிரிவில் டிசம்பர் 26, 27 ஆகிய இரு தினங்களில் மீள்குடியேற்றப்பட்ட கொண்டச்சி, மரிச்சிக் கட்டி, புதுவெளி, வேப்பங்குளம் ஆகிய பகுதிகளில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.
இந்த மருத்துவ முகாம் 26-12-2015 சனிக்கிழமை காலை 9.00 மணி முதல் பி. ப 1.00 மணி வரை மரிச்சிக் கட்டி அல் ஜாஸீம் மகாவித்தியாலயத்திலும், அதே தினம் பி. ப. 2.00 மணி முதல் 6.00 மணி வரை கொண்டச்சி முஸ்லிம் மகா வித்தியாலயத்திலும் நடைபெற்றது.
மறுநாள் ஞாயிற்றுக் கிழமை 27-12-2015 ஆம் திகதி காலை 9.00 முதல் பி. ப 1.00 மணி வரை புதுவெளி ஜும்ஆப் பள்ளிவாசல் மத்ரஸாவின் மண்டபத்திலும், அதே தினம் பி. ப 2.00 மணி முதல் 6 மணி வரை இந்த மருத்துவ முகாம் நடைபெற்றது.
இந்தப் பகுதியிலுள்ள சுமார் 1500 பேர் அளவில் கலந்து கொண்டு பயன்பெற்றுள்ளனர்.
இந்த இலவச வைத்திய முகாமில் மன்னார் நகர சுகாதார வைத்திய பணிமனையின் வைத்திய அதிகாரி, வீ. ஆர், சீ. லேம்பேர்ட், மடு சுகாதார வைத்திய பணிமனையின் வைத்திய அதிகாரி டி. ஒஸ்மன் டென்னி, ராஜகிரிய தேசிய ஆயுர்வேத போதனா வைத்திசாலையின் வைத்திய அதிகாரி ரியாஸ் காசிம், உயர் மருத்துவ கல்வி நிறுவனத்தின் வைத்திய அதிகாரி ஏ. எப். எப். பஸ்லா ஆகியோர் கலந்து கொண்டு வைத்திய பரிசோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.
இந்த இலவச வைத்திய பரிசோதனையின் போது கணிசமாளவு சீரற்ற உணவுப் பழக்க வழக்கத்தினால் கேஸ்டிக் , சளி, சிறு நீராகம், இடுப்பு வருத்தம், சொரி ஆகிய நோய்களுக்கு உட்பட்டவர்களை இனங்காணக் கூடியதாக இருந்தன.





