அம்பாறை மாவட்ட தமிழ் எழுத்தாளர்களின் மேம்பாட்டுப் பேரவையின் இன்னும் ஒரு நிகழ்வாய் முற்றத்து முகவரிகளின் முப்பெருவிழா 2015 எனும் தலைப்பில் மூன்று நூல்களை வெளியிடும் நிகழ்வும் கௌரவிக்கும் நிகழ்வும் அம்பாறை மாவட்ட தமிழ் எழுத்தாளர் மேம்பாட்டுப் பேரவையின் தலைவர் வரலாற்றாய்வாளர் ஜலீல் ஜீ தலைமையில் அம்பாறை மாவட்ட தமிழ் எழுத்தாளர் மேம்பாட்டுப் பேரவையின் பொதுச்செயலாளரும் சிரேஷ்ட ஊடகவியலாளரும் உதவிக்கல்விப்பணிப்பாளருமான விபுலமாமனி வி.ரீ.சகாதேவராஜாவின் வழிநடத்தலின் கீழ் காரைதீவு சண்முகா மகா வித்தியாலய சண்முகா கலாலயத்தில் 2015-12-27 ஆம் திகதி இடம்பெற்றது.
வரலாற்றுப்புகழ்மிக்க இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கிழக்குமாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம்.நஸீர் கலந்து நிகழ்வை சிறப்பித்தார்.
இந்நிகழ்வில் பேரவையின் பெண் எழுத்தாளர்கள் 20பேரின் வரலாறு மற்றும் அவர்களது படைப்புகள் அடங்கிய தொகுப்புநூலான “முற்றத்துமுகவரிகள்” எனும் நூல் மற்றும் வரலாற்றாய்வாளர் ஜலீல் ஜீ எழுதிய“வேப்பஞ்சோலை” மற்றும் “இடம்பெயர் ஆய்வுகள்” ஆகிய மூன்று நூல்கள் வெளியிட்டுவைக்கப்பட்டன.
நூல்களுக்கான அறிமுகவுரைகளை தென்கிழக்குபல்கலைக்கழக மொழித்துறை சிரேஸ்ட விரிவுரையாளர் றமீஸ் அப்துல்லாஹ், தென்கிழக்குப்பல்கலைக்கழக சிரேஸ்ட விரிவுரையாளர் கலாநிதி அனுசியா சேனாதிராஜா மற்றும் பிரபல தொல்லியலாய்வாளரும் முன்னாள் பாராளமன்ற உறுப்பினருமான க.தங்கேஸ்வரி மற்றும் பேரவையின் பிரதித்தலைவர் கலாநிதி பரதன் கந்தசாமி ஆகியோர் நிகழ்த்தினர்.
மருதமுனை கவிதாயினி ஹரீஷா சமீம், சம்மாந்துறை கவிதாயினி ஏ.முபிதா, சாய்ந்தமருது கவிக்குவில் சப்னா அமீன், சம்மாந்துறை கவிதாயினி றமீஸா நௌசாட், பாண்டிருப்பு ஆய்வாளர் சுஜாழினி, சம்மாந்துறை கவிதாயினி சபீனத்துன் நுஹா, விநாயகபுரம் ஆய்வாளர் கலைவாணி பிரதீபன், சம்மாந்துறை கவிதாயினி அனுஷா அஸீஸ், சிரேஷ்ட கவிதாயினி கலாபூசணம் சம்மாந்துறை பரீதா இஸ்மாயில், சிரேஷ்ட கவிதாயினி வீரமுனை யுகதாரிணி செஷிலியா, சிரேஷ்ட கவிதாயினி இயற்கவிதாயினி சம்மாந்துறை பழீலா உம்மா, சிரேஷ்ட கவிதாயினி ஆலையடிவேம்பு பற்றூர் பரமேஸ்வரி, சிரேஷ்ட கவிதாயினி திருக்கோவில் சிவகாமிதேவி முருகமூர்த்தி, சிரேஷ்ட கவிதாயினி மருதமுனை மாஜிதா தௌபிக், சிரேஷ்ட கவிதாயினி கலாபூசணம் சம்மாந்துறை பௌசியா அலியார், சிரேஷ்ட கவிதாயினி சாய்ந்தமருது கலைமகள் ஹிதாயா றிஸ்வி, சிரேஷ்ட கவிதாயினி கல்முனை ஜுல்பிகா ஷெரீப், மற்றும் ஆய்வாளர் கலாபூசணம் சாய்ந்தமருது முபிதா உஸ்மான் ஆகியோர் பொறியியலாளர் உதுமான்கண்டு நாபிர் பவுண்டேசன் அமைப்பின் பூரன அனுசரணையில் தயாரிக்கப்பட்ட மேம்பாட்டாளர் விருது 2015 எனும் நினைவுச்சின்னமும் சான்றிதழும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
கிழக்கிலங்கை இடப் பெயர் தொல்லியல் ஆய்வு நூலுக்கான முதற் பிரதியை ஸ்ரீலங்கா முஸ்லிம்காங்கிரஸின் உயர்பீட உறுப்பினரும் அம்பாறை மாவட்ட கௌரவப் பொருளாளருமான புரவலர் தேசமான்ய ஏ.சீ.யஹ்யாகானும் வேப்பஞ்ச்சோலை வரலாற்று ஆய்வு நூலுக்கான முதற் பிரதியை தேசபந்து மு.விஸ்வநாதன்ஸ்தாபிதத் தலைவர்சொர்ணம் குழுமம், கல்முனை சார்பில் அதன் பிரதிநிதியும் பெற்றுக்கொண்டனர்.
முதன்மைப்பிரதிகளை உலமாகட்சியின் தலைவரும் ஸ்ரீலங்கா மீடியா பௌண்டேசனின் செயலாளருமான மௌலவி முபாறக் அப்துல் மஜீட், கலாநிதி இசட்.ஏ.பஷீர் மற்றும் தேசமான்ய ஏ.கிரிஷ்ணமூர்த்தி ஆகியோரும் சமூக சேவகர் ஏ.சீ.எம்.சஹீல் ஆகியோர் கௌரவப் பிரதிகளையும் பெற்றுக்கொண்டனர்.
மேம்பாட்டுப் பேரவையின் அங்கத்தினர்கள் மற்றும் அதிதிகள் என பலரும் நிகழ்வில் கலந்து கொண்டனர்.











