பாராளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு ஒரு நாள் வருகைக்கான கொடுப்பனவாக வழங்கப்படும் தொகையை 500 ரூபாவிலிருந்து 20 ஆயிரம் ரூபாவாக அதிகரிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
கடந்த பாராளுமன்றத்தில் நடைபெற்ற மத்திய செயற்குழுக் கூட்டத்தின் போது அரசாங்க தரப்பில் இந்த யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
ஒரு நாள் வருகைக்காக தற்பொழுது ஒரு பாராளுமன்ற உறுப்பினருக்கு வழங்கப்படுவது 500 ரூபா மாத்திரமே. இது 19500.00 ரூபாவினால் அதிகரிக்கப்படவுள்ளது.
ஒரு மாதத்துக்கு 8 நாட்கள் பாராளுமன்றம் கூடுகின்றது. இதற்கேற்ப, பாராளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு 160000.00 (ஒரு லட்சத்து 60 ஆயிரம்) ரூபா கிடைக்கப் பெறுகின்றது. ஏற்கனவே, வழங்கப்பட்ட கொடுப்பனவின் படி மாதத்துக்கு 4 ஆயிரம் ரூபா மாத்திரமே கிடைக்கப்பெற்றது.
பாராளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு வழமையாக கொடுக்கப்படும் மாதாந்த சம்பளம், தொலைபேசிக் கட்டணம், எரிபொருள் கட்டணம், அலுவலக ஊழியர்களுக்கான கொடுப்பனவு என்பன தவிர்த்தே இந்த வருகைக்கான கொடுப்பனவு வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
