க.கிஷாந்தன்-
பிரதமர் ரனில் விக்கிரமசிங்க வழங்கிய தேர்தல் வாக்குறுதிக்கு அமைய 1000 ருபா சம்பளம் வழங்கப்படவில்லையெனில் மாதாந்தம் வழங்கி வரும் தொழிற்சங்க சந்தா பணத்தினை நிறுத்தி விடுவதாகவும் எதிர்வரும் தீபாவளியை கறுப்பு கொடி ஏந்தி கொண்டாடுவதாகவும் மலையக தோட்ட தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
டிக்கோயா சாஞ்சிமலை டிலரி தோட்ட தொழிற்சாலைக்கு முன்பாக இன்று இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போதே மலையக தோட்ட தொழிலாளர்கள் இவ்வாறு சுட்டிக்காட்டியுள்ளனர்.
குறித்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட தொழிலாளர்கள் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்; “தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பாக 07 தடவைகள் நடைபெற்ற பேச்சுவார்தைகளின் உண்மையான வெளிபாடு என்ன என தொழிலாளர்கள் சந்தேகம் கொள்கின்றனர். எமக்கான சம்பள உயர்வு தொடர்பாக ஆறுமுகம் தொண்டமான், திகாம்பரம், இராதாகிருஸ்ணன், மனோகனேசன் உட்பட பல தலைவர்கள் பேசுகின்றார்களே தவிர 1000 ருபா சம்பள உயர்வு எந்தவகையில் பெற போகின்றார்கள் என்ற உண்மையை எமக்கு தெளிவுபடுத்த வேண்டும்.
ஆனால் 1000 ருபா சம்பள உயர்வை பெற்று தருகின்றோம் என்ற தேர்தல் வாக்குறுதியை நம்பியே வாக்களித்தோம் ஆகையால் ஜனாதிபதியும், பிரதமரும் இந்த சம்பள விடயத்தில் தலையிடவேண்டுமென வழியுறுத்துகின்றோம். சீரற்ற காலநிலையிலும் அட்டை கடியை பொருட்படுத்தாமல் 08 மணிநேரம் கொழுந்து பறிக்கும் தொழிலாளர்களை ஏமாற்ற வேண்டாம்”, என தெரிவித்தனர்.
தொழிலாளர்களை பகடைக்காய்களாக்கி இனிமேலும் துரோகமிழைக்க இடம் கொடுக்க போவதில்லை என தெரிவிக்கும் தொழிலாளர்கள் தாம் விழித்துகொண்டே இருப்பதாக மேலும் தெரிவித்தனர்.
அத்தோடு 10,000 மற்றும் 15,000 ரூபா பெற்றுத்தருகின்றோம் என கூறிய தொழிற்சங்கவாதிகள் தற்போது எங்கே இருக்கின்றார்கள் என கேள்விகளையும் எழுப்பியதுடன் குறித்த விடயம் தொடர்பாக சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என தொழிலாளர்கள் இதன் போது கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது. (நு)
