அபுஅலா –
பாடசாலை கல்வி நடவடிக்கைகளில் யாரும் அரசியல் செய்ய வரக்கூடாது அவ்வாறு அரசியல் செய்ய வருகின்றவர்களுக்கு அதிபர்களாகிய நீங்கள் இடமளிக்கவும் கூடாது என்று கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.முஹம்மட் நஸீர் தெரிவித்தார்.
அட்டாளைச்சேனை கோட்ட பாடசாலை அதிபிவிருத்தி தொடர்பான அதிபர்களுக்கான கூட்டம் (31) சனிக்கிழமை அக்கரைப்பற்று வலய கல்விப் பணிப்பாளர் யூ.எல்.எம்.ஹாசீம் தலைமையில் அட்டாளைச்சேனை அல் முனீறா பெண்கள் உயர் பாடசாலையில் இடம்பெற்றபோதே கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.முஹம்மட் நஸீர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
அரசியல் அதிகாரத்தை வைத்துக்கொண்டு பாடசாலைகளில் அரசியல் செய்யவரும் அரசியல்வாதிகளுக்கு அதிபர்களாகிய நீங்கள் ஒருபோதும் இடமளிக்கக்கூடாது. அதற்கு துணைபோகவும் வேண்டாம். தங்களின் பாடசாலைகளையும், பாடசாலைகளில் கல்வி பயிலும் மாணவச் செல்வங்களின் கல்விச் செயற்பாடுகளையும் எந்தளவு தூரம் அரசியல்வாதிகளைக் கொண்டு முன்னெற்றப் பாதைக்கு இட்டுச் செல்ல முடியுமோ அந்தளவு தூரம் இட்டுச்செல்ல அதிபர்களாகிய நீங்கள் முயற்சிக்கவேண்டும்.
நான் ஒருபோதும் பாடசாலைகளில் அரசியல் செய்யவுமில்லை, செய்யப்போவதுமில்லை அதற்காக கடந்த காலங்களில் அரசியல்வாதிகளுக்கு துணைபோன அதிபர்களையோ அல்லது ஆசிரியர்களையோ பலிவாங்கப் போவதுமில்லை. தற்போது எனக்கு கிடைத்துள்ள இந்த அரசியல் அதிகாரத்தைக் கொண்டு இப்பிரதேச பாடசாலைகளுக்கு தன்னாலான உதவிகளை செய்யவுள்ளேன். அதிபர்களாகிய நீங்கள் தங்களின் பாடசாலைகளிலுள்ள தேவைப்பாடுகளையும் குறை, நிறைகளையும் என்னிடம் சுட்டிக்காட்டி நிறைவு செய்துகொள்ளவேண்டும்.
அட்டாளைச்சேனை கோட்டத்தில் இம்முறை புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த 91 மாணவச் செல்வங்களையும் நான் பாராட்டி கௌரவிக்கவுள்ளேன். அதற்கான சகல ஏற்பாடுகளையும் செய்யுமாறும் வேண்டிக்கொண்டார்.
இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சரின் இணைப்புச் செயலாளர் யூ. எல்.வாஹிட், அட்டாளைச்சேனை கோட்ட கல்விப் பணிப்பாளர் எம்.ஏ.சி.கஸ்ஸாலி மற்றும் அட்டாளைச்சேனை, பாலமுனை, ஒலுவில், மீலாத் நகர், சம்பு நகர், ஆலங்குளம், திராய்க்கேணி பிரதேச பாடசாலை அதிபர்கள் கலந்துகொண்டனர்.

