பொதுபல சேனாவிற்கு அனுசரணை வழங்கியதே, தமது அரசாங்கம் செய்த பாரிய தவறு என முன்னாள் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.‚
பொதுபல சேனாவிற்கு பாதுகாப்பு வழங்கியது, அப்போதைய பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ச எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பொதுபல சேனாவிற்கு அப்போதைய பாதுகாப்பு செயலாளர் அனுசரணை வழங்கியமை தொடர்பில் தான் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை தெளிவூட்டிய போதிலும், அவர் அதனை செவிமடுக்கவில்லை என வாசுதேவ நாணயக்கார சுட்டிக்காட்டியுள்ளார்.
கோத்தாபய ராஜபக்ச மற்றும் பசில் ராஜபக்ச ஆகியோரே ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பின்னடைவுக்கு காரணம் எனவும், பசில் ராஜபக்ச பாராளுமன்றத்திற்குள் மிகவும் ஆடம்பரமான முறையில் செயற்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமது பின்னடைவுக்கான முக்கியமான காரணகர்த்தக்களாக மஹிந்த ராஜபக்ச, கோத்தாபய ராஜபக்ச மற்றும் பஷில் ராஜபக்ச ஆகியோரே இருக்கின்றனர் எனவும் அவர் கூறியுள்ளார்.
1988 மற்றும் 1989ஆம் ஆண்டுகளில் தாம் பேரணியாக சென்று உயிரிழந்த அப்பாவி மக்களுக்கான நிர்மாணித்த நினைவு தூபியை, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் போலியான வாக்குறுதிகளை தமக்கு வழங்கி அதனை முழுமையாக உடைத்தெரிந்ததாகவும் வாசுதேவ நாணயக்கார குறிப்பிட்டார்.
மீண்டும் மஹிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக பதவியேற்பாராக இருந்தால், அவருடன் பாதுகாப்பு செயலாளரை இணையவிடாது தடுப்பதற்கான நடவடிக்கைகளை தாம் முன்னெடுத்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
தாம் மஹிந்த ராஜபக்சவை மீண்டும் ஜனாதிபதியாக நியமிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக முன்னாள் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
