எம்.அனஸ்-
இம்மாதம் 31ஆம் திகதி சனிக்கிழமை நாடெங்கும் அமைக்கப்பட்டுள்ள பரீட்சை நிலையங்களில், பதிவாளர் சேவையின் IIIஆம் வகுப்பின் IIஆம் தரத்திற்கு ஆட்சேர்ப்பதற்கான திறந்த போட்டிப் பரீட்சை நடைபெற உள்ளதாக 2015.10.26ஆம் திகதிய தேசிய பத்திரிகைகளில், ஊடக விளம்பரம் செய்துள்ள பரீட்சை ஆணையாளர் நாயகம், அதற்கான அனுமதி அட்டைகளும், நேர அட்டவணைகளும் விண்ணப்பதாரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அதில் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, கிழக்கு மாகாண பொதுச்சேவையின் சமூகசேவை உத்தியோகத்தர் தரம்- IIஇற்கு மாவட்ட அடிப்படையில் ஆட்சேர்ப்பதற்கான திறந்த போட்டிப் பரீட்சையும், மாவட்டமெங்கும் அமைக்கப்பட்டுள்ள பரீட்சை நிலையங்ளில் இதே தினம் திட்டமிட்டபடி நடைபெறும் என கிழக்கு மாகாண அரசசேவை ஆணைக்குழுவும் பரீட்சார்த்திகளுக்கு அறிவித்துள்ளது.
இவ்விரு பரீட்சைகளும் ஒரே தினத்தில் நடாத்தப்படுவதால், கிழக்கு மாகாணப் பட்டதாரிகளான விண்ணப்பதாரிகளுக்கு ஏற்படும் பாதிப்புக்கள் குறித்து, விடுக்கப்பட்டு வரும் கோரிக்கைகள் தொடர்பில், இலங்கை இஸ்லாமிய ஆசிரியர் சங்கத்தின் தேசியத் தலைவர் எம்.அனஸ், கிழக்கு மாகாண அரச சேவை ஆணைக்குழுவின் பரீட்சைக்கிளையுடன் தொடர்பு கொண்டு கேட்டபோது,பரீட்சைத் திகதியில் மாற்றம் செய்ய வாய்ப்பேதுமில்லை.
பரீட்சார்த்திகள்தான் மாற்றிக்கொள்ள வேண்டும். ஏனெனில். வருட இறுதிக் காலமாக இருப்பதனாலும், பரீட்சைகளை விரைவாக நடாத்தி வெற்றடங்களை நிரப்பவேண்டியிருப்பதனாலும், பரீட்சைத் திணைக்களத்தின் பரீட்சை அட்டவணைப்படி ஒவ்வொரு சனி, ஞாயிறு தினங்களிலும் பரீட்சை நடைபெற இருப்பதனாலும், எத்தினத்தில் பரீட்சை நடாத்தினாலும் ஒரு சாராருக்கு இப்பிரச்சினை இருந்து அதனால், பரீட்சார்த்திகளே, தாம் எப்பரீட்சைக்குத் தோற்ற வேண்டும் என்று தாமே தீர்மாணித்துக் கொள்ள வேண்டும். அதுவே எல்லோருக்கும், எல்லாவகையிலும் உதவியாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
