சமஷ்டி நிகழ்ச்சி நிரல் ஒன்றை செயற்படுத்த எதிர்க்கட்சித் தலைவர் என்ற வகையில் இரா.சம்பந்தனுக்கு அதிகாரமோ இயலுமையோ இல்லை என அரசாங்கம் தெரிவித்துள்ளது.
தொலைக்காட்சி ஒன்றில் நேற்றிரவு இடம்பெற்ற அரசியல் விவாத நிகழ்ச்சியில் பேசும் போது ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் மான்னப்பெரும இதனை கூறியுள்ளார்.
விவாதத்தில் கலந்து கொண்ட ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் பத்ம உதயசாந்த, ஐக்கிய இலங்கைக்கு தமிழ் மக்கள் வாழும் பிரதேசங்களில் சமஷ்டி முறையிலான சுயநிர்ணய உரிமைகளுடன் கூடிய தீர்வுகாணப்பட வேண்டும் என சம்பந்தன் கூறுகிறார். அதுவே தமது தேர்தல் விஞ்ஞாபனம் என்றும் சம்பந்தன் கூறியுள்ளார் என்றார்.
இதன் போது குறுக்கிட்ட மான்னப்பெரும, ரணில் விக்ரமசிங்க எதிர்க்கட்சித் தலைவராக இருந்த போது, அவரது நிகழ்ச்சி நிரலை செயற்படுத்த மகிந்த ராஜபக்ச இடமளித்தாரா?.
இப்படியான நிலையில், சம்பந்தனின் நிகழ்ச்சி நிரலை அமுல்படுத்த சந்தர்ப்பம் கிடைக்கும் என நீங்கள் கூறுகிறீர்கள்.
எதிர்க்கட்சித் தலைவர் ஒருவருக்கு தேர்தலின் போது தனது நிகழ்ச்சி நிரலை முன்வைக்க முடியும். எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கு வந்து விட்டார் என்பதற்காக பிரதமர் மற்றும் அமைச்சர்களை போல், தனது நிகழ்ச்சி நிரலை அமுல்படுத்த முடியாது. நீங்கள் பொய்யான பூச்சாண்டிகளை உருவாக்குகிறீர்கள் என மான்னப்பெரும குறிப்பிட்டுள்ளார்.
