நடைபெற்று முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலின் போது ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் கீழ் கொழும்பு மாவட்டத்தில் போட்டியிட்டவர்களின் விருப்பு வாக்கு முடிவுகளில் மோசடிகள் இடம்பெற்றுள்ளதாக அந்த கட்சியின் உறுப்பினர்கள் சிலர் குற்றம் சுமத்தியுள்ளனர்.
கொழும்பு மாவட்ட ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 7 ஆசனங்களை பெற்றுகொண்டுள்ள நிலையில், மஹிந்த ராஜபக்ச தரப்பை பிரதிநிதித்துவப்படுத்தியவர்களே நாடாளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ளனர்.
இந்தநிலையில் மஹிந்த தரப்பில் போட்டியிட்டு தோல்வியடைந்துள்ள ஜகத் குமார, தமது விருப்பு வாக்குகளை மீள எண்ண வேண்டும் என தேர்தல்கள் ஆணையாளரிடம் கோரிக்கை ஒன்றினை முன்வைக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அவர், கடந்த 17ஆம் திகதி இடம்பெற்ற தேர்தலுக்கான முடிவுகளை எங்களுக்கு 19ஆம் திகதி அதிகாலை 2 மணிக்கே வழங்கினார்கள். அந்த சந்தர்ப்பத்தில் நான் 29702 விருப்பு வாக்குகளை பெற்றிருந்தேன்.
எனினும் கடந்த 31 ஆம் திகதி இரண்டு வாரங்களுக்கு பின் வெளியாகிய முடிவுகளுக்கமை நான் 30402 விருப்புகளை பெற்றிருந்தேன் என தெரிந்துகொண்டேன். 700 விருப்புகள் அதிகமாக பெற்றிருந்தேன். எனவே நாங்கள் சந்தேகித்ததனை போன்று விருப்பு வாக்குகளை எண்ணும் போது ஏதோ ஒரு சில தவறுகள் இடம்பெற்றுள்ளது.
இந்தநிலையில் எனது விருப்பு வாக்குகளை மீண்டும் எண்ணுமாறு தேர்தல்கள் ஆணையாளரிடம் கோரிக்கை ஒன்றினை முன்வைக்கவுள்ளேன் என தெரிவித்துள்ளார்.
