பழுலுல்லாஹ் பர்ஹான்-
துவிச்சக்கர வண்டிகளினால் ஏற்படும் வீதி விபத்துக்களை தடுக்கும் நோக்கில் காத்தான்குடி பொலிஸ் நிலைய மோட்டார் போக்குவரத்து பிரிவினால் காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள துவிச்சக்கர வண்டிகளில் (டைனமோ) மின் பிறப்பாக்கி இல்லாமல் காணப்பட்ட 100 துவிச்சக்கரவண்டிகளை இரண்டு தினங்களில் கைப்பற்றியுள்ளதாக காத்தான்குடி பொலிஸ் நிலைய மோட்டார் போக்குவரத்து பிரிவு பொறுப்பதிகாரி துஷார ஜெயலால் தெரிவித்தார்.
மேற்படி விடயம் தொடர்பில் அவர் தொடர்ந்து தெரிவிக்கையில் கடந்த 13,15ம் திகதிகளில் காத்தான்குடி பொலிஸ் பிரிவில் துவிச்சக்கர வண்டிகளில் மின்பிறப்பாக்கி இல்லாமல் காணப்படுகின்ற துவிச்சக்கரவண்டிகளை கைப்பற்றும் விஷேட நடவடிக்கையின் போதே இவ் துவிச்சக்கரவண்டிகளை கைபற்றியதாகவும் ,காத்தான்குடி பொலிஸ் நிலைய மோட்டார் போக்குவரத்து பிரிவில் வைக்கப்பட்டுள்ள குறித்த துவிச்சக்கரவண்டிகளுக்கு அதன் உரிமையாளர் (டைனமோவை) மின் பிறப்பாக்கியை கொண்டுவந்து பொருத்தும் பட்சத்தில் துவிச்சக்கரவண்டிகளை உரியவர்களிடம் ஒப்படைக்கப்படும் எனவும் ,துவிச்சக்கரவண்டிகள் கைப்பற்றப்பட்டு 5 தினங்களுக்குள் துவிச்சக்கரவண்டி உரிமையாளர்கள் மின் பிறப்பாக்கியை கொண்டுவந்து தங்களது துவிச்சக்கரவண்டிகளுக்கு பொருத்த வேண்டுமெனவும் இல்லாவிட்டால் கைப்பற்றப்பட்ட துவிச்சக்கரவண்டிகள் அனைத்தும் மட்டக்களப்பு நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்படும் எனவும் காத்தான்குடி பொலிஸ் நிலைய மோட்டார் போக்குவரத்து பிரிவு பொறுப்பதிகாரி துஷார ஜெயலால் மேலும் தெரிவித்தார்.
இதே வேளை துவிச்சக்கர வண்டிகளில் (டைனமோ) மின் பிறப்பாக்கி இல்லாமல் காணப்பட்டு போக்குவரத்து பொலிசாரினால் கைப்பற்றப்பட்ட துவிச்சக்கர வண்டிகளின் உரிமையாளர்கள் சிலர் இன்று 16 புதன்கிழமை காத்தான்குடி பொலிஸ் நிலைய மோட்டார் போக்குவரத்து பிரிவுக்கு வருகை தந்து மின் பிறப்பாக்கியை தங்களது துவிச்சக்கரவண்டிகளுக்கு பொறுத்தி துவிச்சக்கரவண்டிகளை காத்தான்குடி பொலிஸ் நிலைய மோட்டார் போக்குவரத்து பிரிவு பொறுப்பதிகாரி துஷார ஜெயலாலிடம் இருந்து பெற்றுச் சென்றமை குறிப்பிடத்தக்கது.



