மஹிந்தவின் பலம் என்னவென்பதை அனுராதபுரம் கூட்டத்துடன் ரணில் விளங்கிக்கொண்டிருப்பார். மஹிந்தவுடன் நேருக்குநேர் மோதி ரணிலினால் வெற்றிபெற முடியாது என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தலைவர்கள் தெரிவித்தனர்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விரும்பாவிட்டாலும் மஹிந்தவை பிரதமராக்கிக் காட்டுவோம் எனவும் அவர்கள் சவால் விடுத்தனர்.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் உறுப்பினர்களால் நேற்று எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் நடத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பின்போதே அவர்கள் மேற்கண்டவாறு குறிப்பிட்டனர். இதில் கருத்து தெரிவித்த முன்னாள் அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் குறிப்பிடுகையில்,
ஆட்சி மாற்றத்தின் பின்னரான இந்த எழுமாத காலத்தில் நாட்டின் நிலைமை முழுமையாக மாற்றம் கண்டுள்ளது. அதேபோல் பாராளுமன்றம் கலைக்கப்பட்ட பின்னரும் அரசாங்கம் பாராளுமன்ற விதிமுறைகளுக்கு மாறான வகையில் செயற்பட்டு வருகின்றது.
இந்த காலப்பகுதியில் வெளிநாட்டுக் கடன்களை அரசாங்கம் வாங்கியுள்ளது, பல விலைமனுக் கோரல்களை செய்துள்ளது, அதேபோல் தேர்தல் சட்டதிட்டங்களை மீறும் வகையில் செயற்பட்டு வருகின்றது. இவை அனைத்தையும் தடுத்து நிறுத்த வேண்டும். கடந்த ஆட்சியில் சட்டதிட்டங்கள் எவ்வாறு கையாளப்பட்டன என்பதை இப்போது மக்களால் நன்றாக உணர முடியும். இவை அனைத்துக்கும் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 17ஆம் திகதி மாற்றம் ஒன்றின் மூலம் முடிவுகான நாம் தயாராக உள்ளோம்.
மேலும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி இம்முறை தேர்தலில் வெற்றி பெறும் என்ற எண்ணம் அனைவர் மத்தியிலும் ஏற்பட்டுள்ளது. ஜனாதிபதியே அதை ஏற்றுக்கொண்டுள்ளார். அதனால்தான் கட்சி வெற்றிபெற்றாலும் மஹிந்தவை பிரதமராக நியமிக்க முடியாதென ஜனாதிபதி தெரிவித்துள்ளார். ஆனால் ஜனாதிபதியால் இந்த விடயத்தில் தனித்து முடிவெடுக்க முடியாது.
பாராளுமன்றத்தில் பெரும்பான்மை ஆதரவு யாருக்கு கிடைக்கின்றதோ அவரையே பிரதமராக நியமிக்க வேண்டும். அந்த வகையில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் முழுமையான ஆதரவு மஹிந்த ராஜபக் ஷவுக்கே உள்ளது. நாம் அனைவரும் ஒன்றிணைந்து மஹிந்தவின் பெயரையே பரிந்துரைப்போம். ஆகவே அவ்வாறான நிலையில் ஜனாதிபதியால் மஹிந்தவை நிராகரிக்க முடியாது. ஆகவே எதிர்வரும் தேர்தலின் பின்னர் மீண்டும் மஹிந்தவை ஆட்சிக்கு கொண்டுவந்தே தீருவோம்.
மேலும் நாட்டைஆளும் பலம் நடைமுறையில் உள்ள அரசாங்கத்துக்கு இல்லை. அவர்களால் குறுகிய காலத்தில் பலமான ஆட்சியை செய்து காட்ட முடியாத நிலையில் அடுத்த ஐந்து ஆண்டுகாலத்துக்கு இவர்களை நம்பி மக்கள் எவ்வாறு வாக்களிக்க முடியும்? இவர்கள் தொடர்ந்தும் தேசிய அரசாங்கம் எனும் கொள்கை நிலைப்பாட்டில் உள்ளனர். ஆனால் இவர்கள் கூறுவது தேசிய அரசாங்கமாகாது, தேசிய அரசாங்கம் என்ற பதம் பிரித்தானியா, ஜேர்மன் நாடுகளின் பொருளாதாரம் வீழ்ச்சி கண்ட நிலையில் அந்த நாடுகளை மீண்டும் கட்டியெழுப்பும் நோக்கத்தில் முன்னெடுக்கப்பட்டது.
ஆளும் கட்சி ஏனைய அனைத்துக் கட்சிகளினதும் ஒத்துழைப்புடன் அரசாங்கம் அமைத்ததே தேசிய அரசாங்கம் ஆகும். ஆனால் இங்கு அவ்வாறு ஒரு அரசாங்கம் அமையவில்லை. ஐக்கிய தேசியக் கட்சி தமக்கு சாதகமான ஆட்சியை அமைத்துக் கொள்ளும் நோக்கத்தில் தமக்கு வேண்டப்பட்ட நபர்களை வைத்து ஆட்சியை அமைத்துள்ளது. எனவே தொடர்ந்தும் தேசிய அரசாங்கம் எனும் இவர்களின் ஆட்சியை நாம் அனுமதிக்க மாட்டோம்.
அத்தோடு வெகு விரைவில் மீண்டும் ஐக்கிய மக்கள் சுதந்தர முன்னணியின் ஆட்சியை அமைக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது. அதற்கு கடந்தவாரம் அனுராதபுரக் கூட்டம் நல்லதொரு எடுத்துக்காட்டாகும். இப்போதாவது எமது பலம் என்னவென்பதை ஐக்கிய தேசியக் கட்சியும் அவர்களது பங்காளிகளும் உணர்ந்துகொள்ள வேண்டும் என்றார்.
முன்னாள் அமைச்சர் டிலான் பெரேரா செய்தியாளர் சந்திப்பில் குறிப்பிடுகையில்,
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியை கண்டும் மஹிந்த ராஜபக் ஷவின் மீள் வருகையை கண்டும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பயந்து விட்டார். நேருக்கு நேர் நின்று மஹிந்தவை தேர்தலில் எதிர்கொள்ள ரணில் அஞ்சுகின்றார். கடந்த இரண்டு பிரதான தேர்தலின் போதும் ரணில் அச்சத்தில் தான் பின்வாங்கினார். இம்முறை நிலைமையும் அவ்வாறு தான் அமைந்துள்ளது. மஹிந்தவை நிராகரித்து தனக்கு சவால் இல்லாது போட்டியிடும் முயற்சிகளை அவர் மேற்கொண்ட போதும் இறுதி நேரத்தில் மஹிந்தவின் மீள் வருகை ஐக்கிய தேசியக் கட்சியை நிலைகுலைய வைத்துள்ளது. மஹிந்த- மைத்திரி போட்டியில் மக்கள் மைத்திரியை ஆதரித்தது உண்மையாகும்.
ஆனால் இப்போது நடப்பது ரணில் மஹிந்த போட்டியேயாகும். இதில் மக்கள் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியை ஆதரிக்கப்போவதில்லை. கடந்த ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் உதவியுடன் மைத்திரிபால சிறிசேன பதவிக்கு வந்திருக்கலாம் ஆனால் இப்போது நிலைமை மாறியுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியை ஆதரித்தது தவறு என்பதை ஜனாதிபதி இப்போதாவது விளங்கிக்கொண்டிருப்பார் எனக் குறிப்பிட்டார்.
