முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட முக்கியஸ்தர்களுக்கு உலங்குவானூர்திகளைப் பெற்றுத் தருமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கோரிக்கையொன்று முன்வைக்கப்பட்டுள்ளது.எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 17 ஆம் திகதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், வேட்பு மனுத் தாக்கல் நாளை மறுதினத்துடன் நிறைவடையவுள்ளது.
இந்நிலையில் கட்சிகள் தமது தேர்தல் பிரசாரங்களை ஆரம்பிக்கும் நடவடிக்கைகளில் மும்முரமாக ஈடுபட்டுள்ளன.இதற்கமைய, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேர்தல் பிரச்சாரங்களில் கலந்து கொள்ளும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ உட்பட முக்கிய பிரமுகர்களுக்கு விமானப்படையின் உலங்குவானூர்திகளை பெற்றுத் தருமாறு முன்னணியின் தேர்தல் பிரச்சார குழு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
தேர்தல் பிரச்சாரங்கள் தொடர்பில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் முக்கியஸ்தர்கள் நேற்று வெள்ளிக்கிழமை கூடி கலந்துரையாடிய பின்னர், ஜனாதிபதியிடம் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன் கட்சியினர் பயணம் செய்ய இலங்கை போக்குவரத்து சபையின் பஸ்களை வழங்குமாறும் அவர்கள் கோரியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
அரசாங்கத்தின் அதிகாரம் தற்போது ஐக்கிய தேசியக் கட்சியிடம் இருப்பதால், இந்த வசதிகளை பெற ஜனாதிபதி தலையிட வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இதனை தவிர மஹிந்த ராஜபக்ஷவுக்கு தற்போது வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் பணியாளர்களின் எண்ணிக்கையை மேலும் அதிகரிக்குமாறும், கொழும்பு மற்றும் குருணாகலில் தேர்தல் பணிகளை ஒருங்கிணைக்க இரண்டு வீடுகளை வழங்குமாறும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அத்துடன், ஏனைய பிரதேசங்களில் உள்ள ஜனாதிபதி மாளிகைகளில் தங்கும் வசதிகளும் ஏற்படுத்திக் கொடுக்கப்படவேண்டும் எனவும் அவர்கள் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.ஆதவன்
