எம்.எஸ்.சம்சுல் ஹுதா
பொத்துவில் ஆதார வைத்தியசாலை வீதி 25 மில்லியன் ரூபா நிதியொதுக்கீட்டில் காபட் வீதியாக புனரமைக்கபட்டு வருகின்றது. இதற்கான நிதியொதுக்கீட்டை முன்னாள் கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி, நீர்ப்பாசன அமைச்சரும், தேசிய காங்கிரஸின் தேசிய அமைப்பாளருமான எம்.எஸ். உதுமாலெப்பை ஒதுக்கீடு செய்திருந்தார்.
இவ்வீதியில் பொத்துவில் ஆதார வைத்தியசாலை, வாசிகசாலை, கலாச்சார மண்டபம், பெரியபள்ளி வாயல், மற்றும் பாடசாலைகள் என அமைந்த பொத்துவில் பிரதேசத்தின் மிகமுக்கியத்துவம் வாய்ந்ததொரு வீதியாகக் காணப்பட்ட போதிலும் மிக நீண்டகாலமாக புனரமைப்புச் செய்யப்படாமல் குன்றும் குழியுமாக போக்குவரத்து செய்ய முடியாத நிலையிலேயே கிடந்து வந்தது.
பொத்துவில் பிரதேசத்தின் முக்கியஸ்தர்கள் மற்றும் புத்திஜீவிகள் இவ்வீதியின் அவலநிலை குறித்து முன்னாள் கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பையின் கவனத்திற்கு கொண்டு வந்ததற்கமைவாக முன்னாள் உள்ளூராட்சி மாகாண சபைகள் அமைச்சர் ஏ.எல்.எம்.அதாவுல்லா அவர்களின் வழிகாட்டலின் பெயரில் கிழக்கு மாகாண சபையின் வீதி அபிவிருத்தி அமைச்சினூடாக முன்னாள் அமைச்சர் உதுமாலெப்பை இதற்கான நிதியொதுக்கீட்டினை கடந்த வருடம் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.


