முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தரப்பு, ஜாதிக ஹெல உறுமய கட்சிக்கு அழைப்பு விடுத்துள்ளது. எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான பிளவடையாத ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் இணைந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
மஹிந்தவிற்கு ஆதரவான முக்கியஸ்தர் ஒருவரினால் இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. முரண்பாடுகளை களைந்து இணைந்து கொள்ளுமாறு கோரப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
எனினும் இந்த அழைப்பினை ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என ஜாதிக ஹெல உறுமய கட்சியின் பேச்சாளர் நிசாந்த ஸ்ரீ வர்ணசிங்க தெரிவித்துள்ளார்.
தேசப்பற்றை முன்னிலைப்படுத்தி ஊழல் மோசடிகளில் ஈடுபட்ட ராஜபக்சக்களை விரட்டியடிக்க இணைந்து செயற்பட்ட கட்சிகள் இணைந்து பொதுத் தேர்தலில் போட்டியிட வேண்டுமென தெரிவித்துள்ளார்.
இதேவேளை, மஹிந்த ராஜபக்ச தரப்பு தனித்து போட்டியிடுவதா இல்லையா என்பது குறித்து இன்னமும் தீர்மானிக்கப்படவில்லை என மஹிந்தவுக்கு நெருக்கமான தரப்புக்கள் தெரிவிக்கின்றன.
