சப்றின்-
நெல் சந்தைப்படுத்தும் சபையின் அக்கரைப்பற்று நெற் களஞ்சியசாலைக்கு பிரதம இணைப்பாளராக நீர்ப்பாசன விவசாய பிரதி அமைச்சர் அனோமா கமகேயின் இணைப்பாளரும், அக்கரைப்பற்று பிராந்திய ஐக்கிய தேசியக் கட்சி அமைப்பாளருமான எம்.எம்.முகம்மட் நிசாம் நியமிக்கப்பட்டுள்ளார்.
விவசாயிகளிடமிருந்து முறையாக நெல் கொள்வனவு செய்வதற்கும், விவசாய உரங்களை உரிய காலத்தில் விவசாயிகளிற்கு வினியோகிப்பதற்கும், அங்கீகரிக்கப்பட்ட சிறந்த விதை நெற்களை வழங்கி விவசாயிகளிற்கு ஊக்கமளிக்கும் நோக்கில் நீர்ப்பாசன விவசாய பிரதி அமைச்சர் அனோமா கமகேயினால் கடந்த 24.05.2015 முதல் செயற்படும் வண்ணம் எம்.எம்.முகம்மட் நிசாம் பிரதம இணைப்பாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
கடந்த காலங்களில் ஒரு முறையான திட்டங்களை வகுக்காது இச் செயற்பாடுகளை மேற்கொண்டுவந்த காரணங்களினால் பல விவசாயிகள் விவசாயச் செய்கையில் நஷ்டங்களை எதிர்நோக்கியதுடன், விவசாயச் செய்கையில் இருந்து முற்றாக ஒதுங்கும் நிலையும் ஏற்பட்டது.
இதனைக் கருத்திற் கொண்ட தற்போதைய அரசாங்கம் விவசாயத்தை முன்னேற்றி அவர்களின் வாழ்வில் ஒளியேற்றும் சிறந்த திட்டங்களை முன்னெடுக்கும் முகமாகவே இவ்வாறான செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பிரதம இணைப்பாளர் எம்.எம்.முகம்மட் நிசாம் தெரிவித்தார்.
இதே போன்று நெல் சந்தைப்படுத்தும் சபையின் அட்டாளைச்சேனை களஞ்சியசாலைக்கு ஜனாப் ஆதம்லெவ்வையும், நிந்தவூர் களஞ்சியசாலைக்கு ஜனாப் றிபாக் ஆகியோரும் பிரதி அமைச்சரினால் நியமனம் செய்யப்பட்டுள்ளார்கள்.
