புதிய அரசாங்கத்தின் 100 நாள் வேலைத்திட்டத்தின் ஊடாக மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பில் தனது பாராட்டுக்களை அமெரிக்க இராஜாங்க செயலாளர் ஜோன் கெர்ரி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் தெரிவித்துள்ளார்.
இவற்றை முன்னோக்கி எடுத்துச் செல்ல தேவையான சகல உதவிகளை இலங்கை அரசாங்கத்திற்கு பெற்றுக் கொடுப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கைக்கு வருகை தந்துள்ள அமெரிக்க இராஜாங்க செயலாளர், நேற்று பகல் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை, ஜனாதிபதி செயலகத்தில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
இதன்போதே ஜோன் கெர்ரி மேற்கண்டவாறு குறிப்பிட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இதேவேளை அமெரிக்காவினால் இலங்கைக்கு வழங்கப்பட்டு வரும் பொருளாதார பங்களிப்பு தொடர்பில் ஜனாதிபதி இதன்போது, அமெரிக்க இராஜாங்க செயலாளரிடம் தனது நன்றிகளை தெரிவித்துள்ளார்.
அத்துடன் இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகள், பொலிஸ் மற்றும் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளுக்கு, ஊழல்களை கட்டுப்படுத்துவது குறித்து பயிற்சி அளிக்குமாறு இதன்போது மைத்திரிபால சிறிசேன முன்வைத்த கோரிக்கைக்கு, ஜோன் கெர்ரி அவ்விடத்திலேயே விருப்பம் தெரிவித்துள்ளார்.
இதேவேளை அமெரிக்கா இராஜாங்க செயலாளர் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை அலரி மாளிகையில் சந்தித்து கலந்துரையாடியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.(ந)
