இன, மத பேதங்களுக்கு அப்பால் சேவையாற்றி கொழும்பு வாழ் மக்களின் மனங்களில் குடிகொண்டுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவின் மறைவிற்குப்பின்னர் அந்த இடம்பெறும் இடைவெளியாகவே இருக்கின்றது.
அந்த இடத்தை நிரப்பக்கூடிய தலைவர் ஒருவர் எமக்கு தேவை என தெரிவித்த கொழும்பு மாநகர சபை உறுப்பினரும் கிராண்பாஸ் வடக்கு ஐக்கிய தேசிய கட்சி அமைப்பாளருமான ஆரியரட்ன சந்தியாகோ; இன, மத பேதங்களுக்கப்பால் மக்களின் உரிமைகளுக்காக குரல்கொடுத்து வரும் மேல்மாகாண சபை உறுப்பினரும் மத்திய கொழும்பு பிரதான அமைப்பாளருமான முஜிபுர் ரஹ்மான அந்த இடத்தை நிரப்ப மிகவும் பொருத்தமானவர் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
கடந்த சனிக்கிழமை கிராண்பாஸ் சென் ஜோசப் வீதிஇ 3 ஆம் ஒழுங்கையில் இடம்பெற்ற ஆதரவாளர்கள் எழுச்சிக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்;
மத்திய கொழும்பில் நாம் அரசியல் அநாதைகளாக இருக்கின்றோம். எமது தொகுதி தொடர்ச்சியாக ஐக்கிய தேசிய கட்சி ஆதரவுத்தளமாக இருந்தாலும் எமக்கானதொரு பாராளுமன்ற பிரதிநிதி இல்லாமல் இருக்கின்றோம்.
1993 ஆம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி ஆர் பிரேமதாசவின் மறைவிற்குப்பின்னர் மத்திய கொழும்பு முழுமையாக புறக்கணிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக 1994 ஆம் ஆண்டுக்குப்பின்னர் ஐக்கிய தேசியக்கட்சியின் ஆட்சியொன்று நிலையாக உருவாகாமையினால் நாம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளோம். அத்துடன் 2010 ஆண்டு தேர்தலின்போது மத்திய கொழும்பிலிருந்து ஐக்கிய தேசிய கட்சியின் சார்பில் போட்டியிட்டவர்கள் தோல்வியடைந்தனர். இதனால் எமது பிரதிநிதித்துவமும் இல்லாமல்போயுள்ளது.
இன்று எமது வாக்குகள் பணத்தாலும் சன்மானங்களினாலும் வாங்கப்படுகின்றது. பணத்தைக் கொடுத்து வாக்குகளை பெற்றபின்னர் அரசியல் வாதிகள் எம்மை சந்திக்க வருவதே இல்லை. இப்படி நாம் மிக மோசமாக பாதிக்கப்பட்டிருக்கிறோம். இந்நிலையில் ஆர். பிரேமதாசவிற்கு பின்னர் மத்திய கொழும்பில் ஒரு தலைவரை உருவாக்க வேண்டியிருக்கிறது.
இதற்காக நாம் இன மத பேதமின்றி செயலாற்றக் கூடிய மத்திய கொழும்பின் பிரதான அமைப்பாளரும் மேல்மாகாண சபை உறுப்பினருமான முஜிபுர் ரஹ்மானை அடுத்த பாராளுமன்றுக்கு தெரிவு செய்ய வேண்டும். அவர் எமது சமூகத்தின் உரிமைகளுக்காக போராடக் கூடியவர்.
தேர்தல் காலம் நெருங்குவதால் பெரசூட் மூலம் சில அரசியல் வாதிகள் வந்து வீடு தருவதாக சொல்வார்கள். அந்த போலி வாக்குறுதிகளை நம்ப வேண்டாம். அடுத்து வரும் ஐக்கிய தேசிய கட்சியின் ஆட்சியில் மத்திய கொழும்பில் எந்தவொரு அபிவிருத்தி இடம்பெற வேண்டுமானாலும் பிரதான அமைப்பாளர் முஜிபுர் ரஹமானின் மூலமாகவே இடம்பெறும். எனவே அவரை அடுத்த பாராளுமன்ற தேர்தலில் வெற்றிசெய்ய நாம் முயற்சிப்போம் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.