2-ஆவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது மும்பை!

கொல்கத்தா ஈடன் கார்டனில் நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் சென்னையை வீழ்த்தி மும்பை அணி சாம்பியன் பட்டம் வென்றது. 

கடந்த 2013-ம் ஆண்டு சென்னையை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்ற மும்பை இந்த வருடமும் சென்னையை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது. 

8 தொடரில் 6 முறை இறுதிப்போட்டிக்கு முன்னேறிய சென்னை அணி 4 முறை பரிதாபமாக தோல்வியை சந்தித்துள்ளது. 

இந்த தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற மும்பை அணிக்கு ரூ.15 கோடி பரிசாக வழங்கப்பட்டது. பி.சி.சி.ஐ. செயலாளர் அனுராக் தாகூர் இந்த தொகையை வழங்க மும்பை அணியின் கேப்டன் ரோகித் சர்மா பெற்றுக்கொண்டார். இதேபோல் சென்னை அணி தலைவர் தோனி ரூ.10 கோடியை பெற்றுக்கொண்டார். 

நாணய சுழற்சியை வென்ற சென்னை அணி தலைவர் தோனி களத்தடுப்பை தேர்வு செய்தார். இரு அணிகளிலும் வீரர்கள் யாரும் மாற்றப்படவில்லை. 

முதலில் துடுப்பெடுத்தாடிய மும்பை அணி தொடக்க வீரர் சிம்மன்ஸ் (68), தலைவர் ரோகித் சர்மா (50), பொல்லார்டு (36), அம்பதி ராயுடு (36 ஆட்டமிழக்கவில்லை) ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் 5 விக்கெட் இழப்பிற்கு 202 ஓட்டங்கள் குவித்தது. சென்னை அணி சார்பில் நெஹ்ரா 4 ஓவரில் 41 ஓட்டங்களும், மோகித் சர்மா 4 ஓவரில் 38 ஓட்டங்களும், ஜடேஜா 2 ஓவரில் 26 ஓட்டங்களும் விட்டுக்கொடுத்தனர். 

203 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் சென்னை அணியின் சுமித், ஹசி தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். 9 பந்துகள் சந்தித்த ஹசி 4 ஓட்டங்கள் மட்டுமே எடுத்து ஏமாற்றம் அளித்தார். அடுத்து ரெய்னா களம் இறங்கினார். 

ரெய்னாவும், சுமித்தும் களத்தில் நீண்ட நேரம் நின்றார்கள். ஆனால் அவர்களால் அதிரடியாக விளையாட முடியவில்லை. மும்பை அணியின் வேகப்பந்து வீச்சு அபாரமாக இருந்தது. 11-வது ஓவரின் கடைசி பந்தில் பவுண்டரி அடித்து சுமித் அரை சதத்தை கடந்தார். 

12-வது ஓவரை ஹர்பஜன் சிங் வீசினார். இந்த ஓவரின் 5-வது பந்தில் சுமித் எல்.பி.டபிள்யூ. ஆகி வெளியேறினார். அவர் 48 பந்தில் 57 ஓட்டங்கள் எடுத்தார். அடுத்து சென்னை அணி தலைவர் தோனி களம் இறங்கினார். ஹர்பஜன் சிங் வீசிய 14-வது ஓவரில் ரெய்னா ஸ்டம்பிங் ஆகி பெவிலியன் திரும்பினார். அவர் 19 பந்தில் 28 ஓட்டங்கள் எடுத்தார். ரெய்னா அவுட் ஆனதும் சென்னை அணியின் தோல்வி உறுதியானது. 

அடுத்து வந்த பிராவோ 9 ஓட்டங்களுடக் ஆட்டமிழந்தார். பின்னர் தோனி (18), டு பிளிசிஸ் (1), நெஹி (3), அஸ்வின் (2) ஆட்டமிழக்க சென்னை அணியால் 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 161 ஓட்டங்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் மும்பை அணி சென்னையை 41 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 2-வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது. 

மும்பை அணி சார்பில் மெக்கிளெனகன் 3 விக்கெட்டும், மலிங்க மற்றும் ஹர்பஜன் சிங் தலா இரண்டு விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -